/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவு நீரேற்று நிலையங்களில் துர்நாற்றத்தை தடுக்க 'ஸ்க்ரப்பர்' தொழில்நுட்பம் பயன்படுத்தும் வாரியம்
/
கழிவு நீரேற்று நிலையங்களில் துர்நாற்றத்தை தடுக்க 'ஸ்க்ரப்பர்' தொழில்நுட்பம் பயன்படுத்தும் வாரியம்
கழிவு நீரேற்று நிலையங்களில் துர்நாற்றத்தை தடுக்க 'ஸ்க்ரப்பர்' தொழில்நுட்பம் பயன்படுத்தும் வாரியம்
கழிவு நீரேற்று நிலையங்களில் துர்நாற்றத்தை தடுக்க 'ஸ்க்ரப்பர்' தொழில்நுட்பம் பயன்படுத்தும் வாரியம்
ADDED : ஜூலை 24, 2025 12:35 AM
சென்னை, கழிவு நீரேற்று நிலையங்களில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க, முதற்கட்டமாக, 46 நிலையங்களில், 5.5 கோடி ரூபாயில், 'ஸ்க்ரப்பர்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சி எல்லையில், குடிநீர் வாரியம் வாயிலாக, தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 73 கோடி லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது.
இவை, 371 கழிவு நீரேற்று நிலையங்கள் சென்று, அங்கிருந்து 8 சுத்திகரிப்பு நிலையங்கள் செல்கிறது. இதற்காக, 4,156 கி.மீ., குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக சுத்திகரிக்கப்படும் நீர், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமாகும் நீர் கடலில் சேர்க்கப்படுகிறது.
சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப கட்டமைப்புகள் மேற்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கழிவு நீரேற்று நிலையங்கள், குடியிருப்புகள், பூங்கா, சாலையோரம் போன்ற பகுதிகளில் உள்ளன.
இதில் இருந்து வெளியேறும் மீத்தேன், அமோனியா, எச்2எஸ் வாயுக்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நிலையங்களை சுற்றி வசிக்கும் மக்கள், சுவாச பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். துாக்கம் இல்லாமல் தவிக்கின்றனர்.
இதனால், விரிவாக்க பகுதிகளில் புதிதாக துவங்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள கழிவு நீரேற்று நிலையங்களுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், 'ஸ்க்ரப்பர்' தொழில்நுட்பத்தில் துர்நாற்றம் வீசாமல் நிலைங்களை இயக்க, வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, 46 கழிவு நீரேற்று நிலையங்களில், 5.5 கோடி ரூபாயில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணியை ஆறு மாதத்தில் முடிக்க, வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக, அடர்த்தியாக வீடுகள் உள்ள பகுதி மற்றும் அதிக திறன் கொண்ட கழிவு நீரேற்று நிலையங்களில், 'ஸ்க்ரப்பர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது, துர்நாற்றத்திற்கு காரணமான வாயுக்களை உறிஞ்சி எடுத்து அழித்து விடும். அதன்பின், வெளியேறும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசாது. கொளத்துார், மயிலாப்பூர் நீரேற்று நிலையங்களில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதில், பெரிய அளவில் பயன் கிடைத்தது. அதனால், எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை, அங்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அடுத்தடுத்து, அனைத்து நீரேற்று நிலையங்களிலும், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். புதிதாக அமைக்கும் நிலையங்கள், இந்த தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்படும். - குடிநீர் வாரிய அதிகாரிகள்