/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காளி ஏரியை கையகப்படுத்த தடை கோரி வழக்கு
/
காளி ஏரியை கையகப்படுத்த தடை கோரி வழக்கு
ADDED : ஆக 28, 2025 12:23 AM
சென்னை, பரந்துார் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காளி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், காளி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர் பி.கமலக்கண்ணன் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் காளி ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பியே, அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள பரந்துாரில், பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.
விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இவற்றில், 26.54 சதவீதம் நீர்நிலைகளும் அடங்கும்.
குறிப்பாக, ஏகனாபுரம் மக்கள், தங்கள் பாசன வசதிக்காக நம்பியிருக்கும் காளி ஏரியும் கையகப்படுத்தப்படும் சூழல் உள்ளது.
காளி ஏரியை கையகப்படுத்துவது, அப்பகுதி மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நியாயமற்ற செயல்.
ஏகனாபுரம் காளி ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டிற்காகவோ வகை மாற்றம் செய்யக்கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் 26ம் தேதி அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி முகமது சபீக் முன், இன்று விசாரணைக்கு வருகிறது.