/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததால் தற்கொலை டைரியில் எழுதி முடிவை தேடிய மத்திய அரசு ஊழியர்
/
அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததால் தற்கொலை டைரியில் எழுதி முடிவை தேடிய மத்திய அரசு ஊழியர்
அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததால் தற்கொலை டைரியில் எழுதி முடிவை தேடிய மத்திய அரசு ஊழியர்
அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததால் தற்கொலை டைரியில் எழுதி முடிவை தேடிய மத்திய அரசு ஊழியர்
ADDED : அக் 29, 2025 12:41 AM
திருமங்கலம்: 'அலுவலக பணத்தை கையாடல் செய்தது என் தவறு தான்; நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, டைரியில் எழுதி வைத்து, மத்திய அரசு ஊழியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
அண்ணா நகரைச் சேர்ந்தவர் நவீன் கண்ணன், 38; தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கணக்குகள் அலுவலகத்தில், சீனியர் ஆடிட்டராக பணிபுரிந்தார்.
இவரது மனைவி நிவேதிதா, 35; தெற்கு ரயில்வே அதிகாரி. இவர்களின் மகன் லவின், 7. இவர்களுடன், நவீன் கண்ணனின் வயதான பெற்றோரும் வசித்தனர்.
நேற்று முன்தினம், அறையில் சிறுவன் லவின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டும், நிவேதிதா கழுத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். நிவேதிதா தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதற்கிடையில், நவீன் கண்ணன், வில்லிவாக்கம் - கொரட்டூர் இடையே, 'சதாப்தி எக்ஸ்பிரஸ்' ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரித்த போலீசார் கூறியதாவது:
முதற்கட்ட விசாரணையில், நவீன் கண்ணன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக, பெற்றோரிடம் கூறியுள்ளார்.
தடயவியல் துறையினர் நடத்திய சோதனையில், வீட்டில் இருந்து டைரி ஒன்று சிக்கியது. அதில், 'அலுவலக பணத்தை கையாடல் செய்தேன். அது, என் தவறு தான்; குடும்பத்தினருக்கு தெரியாது.
தற்கொலை செய்ய போகிறேன்' என, அவரச அவசரமாக அவர் ஆங்கிலத்தில் எழுதிய இரு வரிகள் மட்டுமே இருந்தன. இதை வாக்குமூலமாக வைத்து விசாரிக்கிறோம்.
மத்திய அரசின் ராணுவ துறை ஓய்வூதியத்திற்கான தொகையில், கோடி கணக்கில் நவீன் கண்ணன் கையாடல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஏதேனும் புகார் உள்ளதா என, அரசு கணக்காளர் அலுவலகத்தில் நேரடியாக விசாரிக்க உள்ளோம். கணவர் தான் நிவேதிதாவின் கழுத்தை அறுத்தாரா என, நிவேதிதா குணமடைந்ததும் விசாரிக்கப்படும். பிரேத பரிசோதனை முடிந்து, தாய், மகன் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.

