/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு முதல் 'ஏசி' ரயில் சேவை துவக்கம்
/
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு முதல் 'ஏசி' ரயில் சேவை துவக்கம்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு முதல் 'ஏசி' ரயில் சேவை துவக்கம்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு முதல் 'ஏசி' ரயில் சேவை துவக்கம்
ADDED : ஏப் 19, 2025 11:47 PM

சென்னை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை, நேற்று துவங்கியது. ஏராளமான பயணியர் இதில் பயணித்து, மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்கான, பெட்டிகள், ரயில் தயாரிப்பு பணி, சென்னை ஐ.சி.எப்.,பில் நடந்துவந்தது.
இப்பணி முடிந்ததை அடுத்து, கடந்த மாதம் 19ம் தேதி வில்லிவாக்கம், அம்பத்துார், அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தின் முதல் 'ஏசி' மின்சார புறநகர் ரயில் சேவை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கப்பட்டது. ஏராளமான பயணியர் டிக்கெட் எடுத்து, ரயிலின் 12 பெட்டிகளில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க, தானியிங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 12 பெட்டிகளுடன் 110 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயில், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும், புறநகர் பாதையில் இயக்கப்படும்.
பிரதான பாதையில் செல்லும்போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் 'ஏசி' புறநகர் மின்சார ரயில் சேவை, முக்கியஸ்தர்கள் யாருமின்றி, வழக்கமான ரயில் சேவை போல் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாதாரண மின்சார ரயில் சேவைக்கும், 'ஏசி' ரயில் சேவைக்கும், ஐந்து முதல் 20 ரூபாய் வரை மட்டுமே வேறுபாடு உள்ளது. ஆனால், 'சீசன் பேக்கேஜில்' மட்டும், 800 முதல் 1,000 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக மக்கள் பயனடையும் வகையில், இந்த முரண்பாட்டை ரயில்வே நிர்வாகம் குறைத்து, நிர்ணயம் செய்ய வேண்டும்.
- சுரேஷ், பொறியியல் கல்லுாரி மாணவர்
சென்னை கடற்கரை - தாம்பரம் வரை முதல் வகுப்பில் பயணிக்க 80 ரூபாய் கட்டணம். அதுவே 'ஏசி' ரயிலில் 85 ரூபாய் தான். ஆனால், மாதாந்திர பயணச்சீட்டில் 1,000 ரூபாய் அதிகமாக உள்ளது. முதல் வகுப்பில் பயணிக்க மாதம் 765 ரூபாய். ஏசி ரயிலில் பயணிக்க 1,800 ரூபாய் நிர்ணயித்துள்ளனர். கட்டணத்தை குறைக்க வேண்டும்.
நந்தகுமார்,
ஐ.டி., ஊழியர்
மும்பையில் உள்ளதுபோல் சென்னையில் 'ஏசி' ரயில் இயக்குவது மகிழ்ச்சி. கூடுதலாக ஏசி ரயில்களை இயக்க வேண்டும். பயண அட்டவணை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். காலை 7:00, மதியம் 3:45 மற்றும் மாலை 7:00 ஆகிய நேரங்களில் செல்ல மட்டுமே அனுமதித்துள்ளனர். பயணியர் வருகைக்கு ஏற்ப காலை 10:00, மதியம் 12:00 மற்றும் 4:00 மணிக்கும் சேவையை துவங்க வேண்டும். கோடை வெயில் கொளுத்துவதால், மக்கள் பயனடைவர்.
- பிரணவ்,
சட்டக் கல்லுாரி மாணவர்