/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5ல் இருந்து அதல பாதாளத்திற்கு சரிவு துாய்மையில் சென்னைக்கு 104வது இடம்
/
5ல் இருந்து அதல பாதாளத்திற்கு சரிவு துாய்மையில் சென்னைக்கு 104வது இடம்
5ல் இருந்து அதல பாதாளத்திற்கு சரிவு துாய்மையில் சென்னைக்கு 104வது இடம்
5ல் இருந்து அதல பாதாளத்திற்கு சரிவு துாய்மையில் சென்னைக்கு 104வது இடம்
UPDATED : ஜூலை 20, 2025 08:30 AM
ADDED : ஜூலை 20, 2025 01:31 AM

சென்னை: குப்பை, கழிவுநீர் மேலாண்மையை முறையாக பின்பற்றாத சென்னை நகரம், துாய்மை நகர பட்டியலில் 2023ல் ஐந்தாவது இடத்தில் இருந்து தற்போது 104வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், 'ஸ்வச் சர்வேக் ஷன்' என்ற துாய்மைக்கான நகரங்கள் குறித்த பட்டியலை, ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது.
நாடு முழுதும் உள்ள கிராமங்கள், நகரங்களின் சுகாதாரம், குப்பை சேகரிப்பு, கழிவுநீர் அமைப்பு, மாசுபாடு போன்றவற்றை சிறப்பாக கையாளுவது குறித்து, ஆண்டுதோறும் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி, 2024 -25ம் ஆண்டுக்கான துாய்மை நகர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தமிழக அளவிலான துாய்மை நகர பட்டியலில் சென்னை மிகவும் பின்தங்கியுள்ளது. நாமக்கல், ராசிபுரம், அருப்புக்கோட்டை ஆகியவை, முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில், 651 நகரம் மற்றும் ஊரக பகுதிகள் இடம் பெற்ற நிலையில், சென்னை நகரம், 104வது இடத்தை பிடித்து பின்தங்கியுள்ளது.
என்ன காரணம்?
சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மற்றும் அம்பத்துாரில் சில பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார்வசம் உள்ளது. இதற்காக மாநகராட்சி, குப்பை எடைக்கு ஏற்ப ஒப்பந்ததாரரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வருகிறது.
ஒப்பந்தம் விடும்போது, ஒவ்வொரு வீட்டிலும் குப்பை தரம் பிரித்து வழங்க வேண்டும். அடுக்குமாடி மற்றும் 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தியாகும் இடங்களில் சேகரிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் இவற்றை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.
குப்பையை முறையாக தரம் பிரிக்காதது, வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது சாலையில் சிதறி விழுவது, குப்பை, கழிவுநீர் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீதும், மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களால், சென்னை மாநகராட்சி, மத்திய அரசின் துாய்மை நகர பட்டியலில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது.
சென்னை மாநகராட்சி, 2023ம் ஆண்டில், 10 லட்சம் மக்கள் தொகை உடைய 45 நகரங்களில், 37வது இடம் பிடித்தது. அதேபோல், 446 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலில், 199வது இடம் பிடித்தது.
மேலும், தமிழக அளவிலான பட்டியலில், 5வது இடத்தில் இருந்தது. தற்போது, சுகாதாரமான பட்டியலில், 104வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு, மாநகரை சுகாதாரமாக பராமரிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. துாய்மை நகர பட்டியலில் சென்னை நகரம் பின்தங்கியது குறித்து, 'நியாயமற்ற பட்டியல்' என, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்து உள்ளார்.
மண்டலங்களில் குப்பை தேக்கம் குறித்த புகார்கள் வருவது குறைவு. அதேநேரம், மாநகராட்சியே நேரடியாக சில மண்டலங்களில் குப்பை சேகரித்து வருகிறது. அங்கு, நிரந்தர துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்து வருகின்றனர்.
அவர்களில் பலர், 58 வயதை கடந்து விட்டனர். வயது மூப்பு காரணத்தால் அவர்களால் முறையாக பணி செய்ய முடிவில்லை. 15 மண்டலங்களிலும் குப்பை அகற்றும் பணி தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு, சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த பட்டியலுக்கு பொதுமக்களின் கருத்தும் அவசியம். எனவே, வருங்காலங்களில் மாநகராட்சி குப்பை கையாளும் தரவுகளை முறையாக அளிப்பதுடன், பட்டியலில் முன்னுரிமை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- குமரகுருபரன்
கமிஷனர், சென்னை மாநகராட்சி
படுமோசம்
பல சாலைகளில் மண் துாசியால், சுவாச பிரச்னை பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் குப்பையை கையாளுவதில்லை. சட்டவிரோதமாக நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டி எரிப்பது, மருத்துவ கழிவுகள் கொட்டுவதும் ஆங்காங்கே நடக்கிறது. இதை கண்காணிக்க தனிப்படை இருந்தும், மாநகராட்சி மெத்தனமாக செயல்படுகிறது. இதனாலே, துாய்மை நகர பட்டியலில் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.
- பாலசுப்பிரமணியன், 52,
திருவான்மியூர்
பட்டியல் தயாரிப்பது எப்படி?
குப்பை மற்றும் கழிவு நீர் மேலாண்மை குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் தூய்மை பொதுகழிப்பறை சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் எடுக்கப்படுகிறது.
தேசிய அளவிலான பட்டியலில் மொத்தம் 40 இடங்களில் முதல் மூன்று இடங்களை ஆமதாபாத், போபால் , லக்னோ, பிடித்துள்ளன. சென்னை 38 வது இடத்தில் பின் தங்கி உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மக்கள் என்ற பிரிவில் இவை வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் நகரம் முறையே 395, 376, 487 வது இடங்களை பிடித்துள்ளன. இவை 50,000 -3 லட்சம் மக்கள் என்ற பிரிவின் கீழ் இடம் பிடித்துள்ளன.

