/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணைவேந்தரின்றி முதல்முறையாக நடந்த சென்னை பல்கலையின் பட்டமளிப்பு விழா
/
துணைவேந்தரின்றி முதல்முறையாக நடந்த சென்னை பல்கலையின் பட்டமளிப்பு விழா
துணைவேந்தரின்றி முதல்முறையாக நடந்த சென்னை பல்கலையின் பட்டமளிப்பு விழா
துணைவேந்தரின்றி முதல்முறையாக நடந்த சென்னை பல்கலையின் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 25, 2024 12:22 AM

சென்னை,
சென்னை பல்கலை வரலாற்றில் முதன் முறையாக, துணைவேந்தர் இல்லாமல், நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது.
சென்னை பல்கலையின் 166வது பட்டமளிப்பு விழா, நேற்று பல்கலை செனட் அரங்கில் நேற்று நடந்தது. இதில், பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி தலைமையேற்று, 1,031 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும், பல்கலையின் உறுப்புக் கல்லுாரிகளைச் சேர்ந்த 89,053 மாணவர்கள், தொலைநிலை கல்வி வாயிலாக, 16,263 மாணவர்கள், பல்கலையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,404 மாணவர்கள் மற்றும் பி.எச்டி., முடித்த 70 ஆய்வாளர்கள் என, மொத்தம், 1 லட்சத்து, 6 ஆயிரத்து 790 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்ட படிப்புக்கான சான்றிதழில், துணை வேந்தருக்கு பதிலாக, 'கன்வீனர்' பொறுப்பேற்றுள்ள உயர் கல்வி செயலர் பிரதீப் யாதவ் கையெழுத்திட்டிருந்தார்.
பல்கலை இணை வேந்தரும், உயர் கல்வி துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகபங்கேற்று பட்டமளிப்பு சிறப்புரையாற்றிய, ஹோமி பாபா தேசிய நிகர்நிலை பல்கலை வேந்தர் அனில் ககோட்கர் பேசியதாவது:
அதிக மக்கள் தொகையுள்ள நம் நாடு, பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. 10 ஆண்டுகளில், உங்களைப் போன்ற இளைஞர்களால், மூன்றாம் இடத்துக்கு முன்னேறும் என நம்புகிறேன். தனிநபர் வருவாயில், 140வது இடத்தில் உள்ளோம்.
இது, ஏழு மடங்காவது உயர்ந்தால் தான், நமக்கு வசதி வாய்ப்பு பரவலாகும்.
அதற்கு இளைஞர்கள், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையும், உற்பத்தி சார்ந்த தொழில்களையும் கைப்பற்ற வேண்டும். கிராமங்களும் ஏற்றுமதி மண்டலங்களாக மாற வேண்டும்.
பல்துறை மாணவர்களும், வல்லுனர்களும் இணைந்து, படைப்பாற்றலை மேம்படுத்த, கல்வி நிறுவனங்கள் களம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காவல் துறை சார்ந்த ஆய்வுகளை செய்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாங்கிட், சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து ஆய்வு செய்த சென்னை மாநில கல்லுாரி முன்னாள் பேராசிரியர் தங்கமணி, சட்டவியல் சார்ந்த ஆய்வுக்காக முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் ஆகியோர், பி.எச்டி., பட்டங்கள் பெற்றனர்.
விழாவில், பல்கலை பதிவாளர் ஏழுமலை, தேர்வு கட்டுப்பாட்டாளர் இளங்கோ வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.