/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசில் சிறப்பான பணி கமிஷனர் அருண் பாராட்டு
/
போலீசில் சிறப்பான பணி கமிஷனர் அருண் பாராட்டு
ADDED : ஏப் 25, 2025 12:18 AM

சென்னை, ஏப். 25-
பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சிவராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன், 35. கடந்த, 2011 நவ., 16ல், கொல்லப்பட்டார். தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர், 49, அசோக்குமார், 48, ராதாகிருஷணன், 38, பாபு, 45 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு (தற்போது போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக உள்ளார்), உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன், தலைமை காவலர் விமலா ஆகியோரை கமிஷனர் அருண் நேற்று அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
அண்ணா நகர்
அண்ணாநகர், அன்னை சத்யா நகர், 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சந்தானம், 36, கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, ஜோசப்,18, சதீஷ், 25, ராபர்ட், 21, விமல்ராஜா, 19 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய, மூன்று  சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
இவ்வழக்கு விசாரணை சென்னை சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது ராபர்ட் இறந்து விட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா, 2,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
சிறப்பாக பணியாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளர் சரவணனை, கமிஷனர் நேற்று அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
***

