
செய்யூர், செய்யூர் அடுத்த ஆலம்பரைக்குப்பம் கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜித், 27, மாணிக்கம், தினேஷ், அகிலன் ஆகிய நான்கு பேரும், நேற்று காலை நாட்டுப்படகில், கடலில் மீன்பிடித்தனர்.
அப்போது இவர்களின் வலை, பரமன்கேணிகுப்பம் மீனவர்களின் வலையில் சிக்கியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது. இதில், மேற்கண்ட நால்வரையும், பரமன்கேணிகுப்பம் மீனவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து, ஆலம்பரைக்குப்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள், படகில் பரமன்கேணிகுப்பத்திற்கு சென்று, அங்கு மீன்பிடித்து திரும்பிய ஹிரிதாஸ், பொன்னன், ஏழுமலை ஆகிய மூவரை தாக்கி, படகுடன் ஆலம்பரைக்குப்பத்திற்கு திரும்பினர்.
இதையடுத்து, அவர்களை விடுவிக்கக் கோரி, பரமன்கேணிகுப்பம் மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சூணாம்பேடு போலீசார், ஆலம்பரைக்குப்பம் சென்று, அந்த மூன்று மீனவர்களையும் மீட்டு, பரமன்கேணிகுப்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

