/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகலில் சாலை ஒட்டு பணி அண்ணாசாலையில் நெரிசல்
/
பகலில் சாலை ஒட்டு பணி அண்ணாசாலையில் நெரிசல்
ADDED : அக் 02, 2024 12:17 AM

சென்னை,மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து சாலைகள், உட்புற சாலைகளில் பல்வேறு சேவை துறைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும், சாலை வெட்டுகள் அனைத்தும், மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டன.
அதை தொடர்ந்து, தற்போது சாலை வெட்டு மற்றும் சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை, மஹாராஷ்டிர மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள நவீன இயந்திரம் வாயிலாக மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக சாலை போடுவது மட்டுமின்றி, ஒட்டுப்போடும் பணியும் இரவு நேரத்தில் தான் மேற்கொள்ளப்படும். ஆனால், தேனாம்பேட்டை மண்டலத்தில் பகல் நேரத்தில் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி, பணியை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில், பீக் ஹவர்சில் சாலை ஒட்டுப்போடும் பணியை மாநகராட்சியினர் மேற்கொண்டனர்.
இதனால் நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து கிரீம்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவசர சேவை வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டன.
இதற்கு எப்படி போக்குவரத்து காவல் துறையினர் அனுமதி கொடுத்தனர் என, மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டால், போலீசார் அனுமதி கோரப்படவில்லை என்று தெரிவித்தனர்.
உரிய அனுமதியின்றி மாநகராட்சி ஊழியர்கள் சாலை சீரமைப்பு பணி மேற்கொண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக, போக்குவரத்து போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

