/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுவரொட்டிகளை கிழித்து அகற்ற வேண்டும் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு தர வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
/
சுவரொட்டிகளை கிழித்து அகற்ற வேண்டும் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு தர வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
சுவரொட்டிகளை கிழித்து அகற்ற வேண்டும் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு தர வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
சுவரொட்டிகளை கிழித்து அகற்ற வேண்டும் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு தர வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
ADDED : ஆக 18, 2025 02:36 AM
கோடம்பாக்கம்:'கால்வாய்களில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்தி, வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டலம் முழுதும் அதிகரித்துள்ள சுவரொட்டிகளை கிழித்து அகற்ற வேண்டும்' என, கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல அலுவலகத்தில் நடந்தது.
இதில், விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரராஜா, மண்டல உதவி கமிஷனர் முருகேசன், செயற்பொறியாளர்கள் இனியன், ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
சுப்பிரமணி, ம.தி.மு.க., 139வது வார்டு: ஐந்து மாதங்களாக, மண்டல குழு கூட்ட பொருளில், என் வார்டில் மேற்கொள்ள வேண்டிய எந்த பணியும் வரவில்லை. பிற வார்டுகளின் பணிகள் குறித்து பொருள் இருக்கின்றன. என் வார்டு ஓரம்கட்டப் படுகிறதா?
கணக்குநிலை குழு தலைவர் தனசேகர்: வார்டில் பணிகளை உருவாக்குவது, வார்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் பணி.
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள்: 139வது வார்டில் பல்வேறு பணிகள் மதிப்பீடு தயாரிக்கப் பட்டு ஒப்பந்தம் விடும் நிலையில் உள்ளது.
ஏழுமலை, தி.மு.க., 133வது வார்டு: வட கிழக்கு பருவமழைக்கு முன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல பணிகளுக்கு ரிப்பன் மாளிகையில் ஒப்பந்தம் விடப்படுகிறது. அவர்கள், இங்குள்ள அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்காமல், பணிகள் செய்கின்றனர். இதனால், பல இடையூறுகள் ஏற்படுகின்றன.
உமா ஆனந்தன், பா.ஜ., 134வது வார்டு: என் வார்டில் முறையான அனுமதி மற்றும் அறிவிப்பு இன்றி, திட்டப் பணிகளுக்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. பணி முடிந்ததும், சாலையை முறையாக சீர் செய்வதில்லை.
காமகோடி சாலையில் மின் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பணி முடிந்தும், சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல், விடுதிகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை முறைப் படுத்த வேண்டும்.
கண்ணன், தி.மு.க., 138வது வார்டு: எம்.ஜி.ஆர்., நகர் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதில், எம்.ஜி.ஆர்., நகர் பச்சையப்பன் தெருவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் விடப் படுகிறது.
இதனால், கால்வாயில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அவர்களுக்கு குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும்.
தனசேகர், தி.மு.க., 137வது வார்டு: சென்னை மாநகராட்சியில் உள்ள சுவர்களில், விளம்பர சுவரொட்டி ஒட்டக்கூடாது. வீட்டு உரிமையாளர், தன் வீட்டின் சுற்றுச்சுவரில் விளம்பர சுவரொட்டி ஒட்டினாலும் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் விளம்பர சுவரொட்டி ஒட்டினால் அபராதம் விதிக்க வேண்டும். சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை கிழித்து அகற்ற வேண்டும்.
ரவிசங்கர், தி.மு.க., 129வது வார்டு: என் வார்டில் மோசமான நிலையில் உள்ள 15 சாலைகளை மழைக்கு முன் சீரமைக்க வேண்டும். ஒன்பது சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. அவற்றை பராமரிக்க, ஒரே ஒரு ஆள் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல கி.மீ., துாரத்தில் உள்ள ஒன்பது பூங்காக்களை ஒருவர் எப்படி பராமரிப்பார். அதேபோல், மழைநீர் வடிகால்களை விரைந்து துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர் முருகேசன்: பூங்கா பராமரிப்பில் குறிப்பிட்ட சதுர அடிக்கு ஒரு பணியாளர் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒன்பது பூங்கா, அந்த சதுர அடிக்குள் வருவதால் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மழைநீர் வடிகால்வாயை துார்வார, ஒரு மண்டலத்திற்கு ஒரு நவீன இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தவிர, 95 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பாஸ்கர், தி.மு.க., 130வது வார்டு: வடபழனி 100 அடி சாலை மேம்பாலத்தின் கீழ், ஓராண்டிற்கு முன் குடிநீர் குழாய் சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்னும் குடிநீர் கசிந்து சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளன.
ரத்னா லோகேஸ்வரன், தி.மு.க., 128வது வார்டு: விருகம்பாக்கத்தில் தார் சாலை அமைக்கும்போது, மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், அவர்களுடன் கலந்தாலோசித்து சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும்போது, அதே இடத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் போக்குவரத்தை திருப்பி விடுகிறது. இதனால் சாலையை, முறையாக அமைக்க முடியாத நிலை உள்ளது.
நிலவரசி துரைராஜ், தி.மு.க., 136வது வார்டு: விருகம்பாக்கம் ஏ.வி.எம்., பகுதியில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.