ADDED : ஜன 18, 2026 05:13 AM
மொபைல் போன் திருடியவர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, முத்து தெருவை சேர்ந்தவர் விநாயகம், 74; அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், கடையில் சிறிது நேரம் துாங்கியபோது, அங்கு வந்த மர்ம நபர், அவரது மொபைல் போனை திருடி சென்றார்.
புகாரின்படி விசாரித்த வியாசர்பாடி போலீசார், மொபைல் போனை திருடிய, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பூபதி, 42, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
டீக்கடையில் தீ விபத்து
வேளச்சேரி: சேலத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 50. இவர், வேளச்சேரி விரைவு சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட, இவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, பூட்டிய கடையில் தீப்பற்றியது. தகவலின் படி அங்கு வந்த வேளச்சேரி தீயணைப்பு படையினர், கடையின் பூட்டை உடைத்து, தீயை அணைத்தனர். வேளச்சேரி போலீசார் விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது உறுதியானது.
கடையை சூறையாடிய நால்வர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீஸ் ரகுமான், 34. மெக்கானிக். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, இவரது கடைக்கு வந்த நால்வர் கும்பல், கடையில் இருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை அடித்து நொறுக்கி, ஹபீஸ் ரகுமானையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.
புளியந்தோப்பு போலீசார் விசாரணையில், சில நாட்களுக்கு முன், அதே பகுதியில் வசிக்கும், 14 வயது சிறுமியை ஹபீஸ் ரகுமான் கிண்டல் செய்ததாகவும், அந்த சிறுமியின் உறவினர்கள், மெக்கானிக் கடைக்கு வந்து தாக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, சூளை பகுதியைச் சேர்ந்த அப்துல் ஆசிப், 24, பர்கான், 26, அப்துல் சாதிக், 22, அப்துல் பஷீர், 25, ஆகிய நால்வரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெண்ணை தாக்கியவருக்கு 'காப்பு'
சென்னை: கோடம்பாக்கம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 26. இவரது நண்பரான சூளைமேட்டைச் சேர்ந்த அருண், 24, என்பவருடன் தகராறு ஏற்பட்டதால், இருவரும் பேசிக்கொள்வதை தவிர்த்தனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி, கார்த்திக்கின் மனைவி சர்மிளா, 24, சூளைமேடு ஸ்ரீராமபுரம் பிரதான சாலையில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டிற்குள் புகுந்த அருண், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி, சர்மிளா மற்றும் அவரின் தாயை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
போலீசார் விசாரணையில், அருணின் நடத்தை குறித்து, அவரின் காதலியிடம் கார்த்திக் தவறாக கூறியதால், அருணின் காதலி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதற்கு கார்த்திக்கை பழிவாங்க, அவரின் மனைவி மற்றும் மாமியாரை தாக்கியது தெரியவந்தது. போலீசார், அருணை கைது செய்தனர்.
வாலிபரை தாக்கிய இருவர் சிக்கினர்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 34; வீடுகளுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தன் வீட்டின் அருகே அவர் நடந்து சென்று போது, அங்கு இருந்த நால்வர், மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
ராஜேஷ்குமார் பணம் தராததால், அவரை சரமாரியாக தாக்கி தப்பினர். இதுகுறித்து விசாரித்த பேசின்பாலம் போலீசார், வண்ணாரப்பேட்டை அப்பாசாமி தெருவைச் சேர்ந்த யுவராஜ், 36, உதயகுமார், 35, ஆகிய இருவரை கைது செய்து, தலைமறைவான சிவா, சங்கர் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

