ADDED : ஜூன் 12, 2026 03:07 AM
வேகத்தடையால் வாலிபர் உயிரிழப்பு
பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திரிசூலம், இலுப்பை தோப்பு தெருவைச் சேர்ந்த சண்முகம், 25, நேற்று முன்தினம் இரவு, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பூநாகாத்தம்மன் கோவில் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஸ்கூட்டர் நிலை தடுமாறியதில் துாக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயமடைந்தார். தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி
பல்லாவரம்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தைச் சேர்ந்த சண்முகம், 52, குரோம்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி, பல்லாவரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் 'பங்க்'கில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டு மாடியில் துாங்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
4 நாளே ஆன குழந்தை உயிரிழப்பு
ஆர்.கே.பேட்டை: ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்த தேவா மனைவி அர்ச்சனாவுக்கு, 22, திருத்தணி அரசு மருத்துவமனையில், நான்கு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த அர்ச்சனாவின் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வங்கனுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
திருவல்லிக்கேணி: சேப்பாக்கம், மசூதி தெருவைச் சேர்ந்தவர் முகமது உபேஸ், 38; திருவல்லிக்கேணி, அருணாச்சலம் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி இரவு, அலுவலகம் முன் வாகனத்தை நிறுத்தி, உள்ளே செல்ல முயன்றபோது, பின்னால் வந்த இருவர், அவரது பணப் பையை பறித்து தப்பினர்.
திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து, இந்த வழிப்பறியில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ், 25, நிதீஷ்குமார், 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர்; 2 லட்சம் ரூபாய், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பைக்குகள் மோதல்; வாலிபர் பலி
தாம்பரம்: பீஹார் மாநிலம், ரூப்னி மாவட்டத்தைச் சேர்ந்தோர் மொஜித் ஆலம், 22, ஹைதர் அலி, 22; பைக் மெக்கானிக். தாம்பரத்தில் தங்கியுள்ள இவர்கள், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் இரும்புலியூர் நோக்கி சென்றனர்.
தாம்பரம் டி.டி.கே., நகர் அருகே, எதிரே வந்த 'பல்சர்' பைக் நேராக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மொஜித் ஆலம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஹைதர் அலி, பல்சரில் வந்த சிவகுமார், 32, விஜயகாந்த், 32, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
அம்பத்துார்: அம்பத்துார் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பரமேஸ்வர் பாரிஹஷா, 39, ஹேமந்த்குமார் பாரிஹா, 44, ஆகியோரை, அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மின்தடையின் போது பைக் திருட்டு
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார், 35; தனியார் நிறுவன ஊழியர். இரு நாட்களுக்கு முன், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனம் திருடுபோனது.
கண்காணிப்பு கேமராவை சரத்குமார் ஆய்வு செய்தபோது, இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டபோது, அங்கு வந்த மர்ம நபர், வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. பூந்தமல்லி போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம்
திருவேற்காடு: சிந்தாதிரிப்பேட்டை நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த மோகன், 33. ஆட்டோ ஓட்டுநர். திருமணமாகாத அவர், மதுவுக்கு அடிமையாகி இருந்தார்.
மேல் அயனம்பாக்கம் பாடசாலை தெருவில் செயல்பட்டு வரும், 'ப்ளேசன் பவுண்டேஷன்' போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 5ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை மோகன் திடீரென மயங்கினார். ஊழியர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
