/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர்: பைக்கில் இருந்து விழுந்தவர் வீட்டில் உறங்கிய போது பலி
/
கிரைம் கார்னர்: பைக்கில் இருந்து விழுந்தவர் வீட்டில் உறங்கிய போது பலி
கிரைம் கார்னர்: பைக்கில் இருந்து விழுந்தவர் வீட்டில் உறங்கிய போது பலி
கிரைம் கார்னர்: பைக்கில் இருந்து விழுந்தவர் வீட்டில் உறங்கிய போது பலி
ADDED : டிச 30, 2025 04:47 AM

மணிமங்கலம்: குன்றத்துார் வரதராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ், 30, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, மது போதையில், 'கே.டி.எம்., டியூக்' இருசக்கர வாகனத்தில், தாம்பரத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் விழுந்து கிடந்த சுரேஷை மீட்டு, அவரது வீட்டில் சேர்த்தனர். உறவினர்கள், காலையில் அவரை எழுப்பியபோது, அவர் இறந்தது தெரிந்தது. மணிமங்கலம் போலீசார், சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
வெவ்வேறு இடங்களில்
சகோதரர்களிடம் வழிப்பறி
அம்பத்துார்: அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த கனகராஜ், 44, அதே பகுதி திருப்பதி கொடை சாலை வழியாக, நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக மது போதையில் வந்த நபர், கனகராஜை மிரட்டி 1,000 ரூபாய், மொபைல் போனை பறித்தார்.
அதேபோல், வானகரம் சாலையில் நடந்து சென்ற கனகராஜின் சகோதரரான சத்யராஜை, 37, மிரட்டியர் மர்ம நபர், அவரிடமிருந்து பொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து தப்பினார். இரு வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில், மூவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவனை தாக்கி பணம்
பறித்த நால்வர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடியில், மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட, வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரத்தைச் சேர்ந்த ஜோஸ்வா, 20, பெரம்பூர், அப்பாஸ் மொய்தீன், 21, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.
அதே போல், வியாசர்பாடி, தாமோதரன் நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீநாத், 23, அலெக்ஸ், 20, விக்னேஷ், 20, ஆகிய மூவரும், பொதுமக்களிடம் அடாவடி செய்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, ஏரிக்கரை ஹவுசிங் போர்டை சேர்ந்த பரத், 17, வீட்டிற்கு வெளியே நேற்று நின்றிருந்தார். அங்கு வந்த ஆறு பேர் கும்பல், வீண் தகரறு செய்து, அவரை கல்லால் தாக்கி, பரத்திடம் இருந்த மொபைல் போன் மற்றும் 400 ரூபாயை பறித்து சென்றது.
எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, வியாசர்பாடியைச் சேர்ந்த தனுஷ், 24, சந்தோஷ்குமார், 27, மற்றும் 15 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் உட்பட நால்வரை கைது செய்தனர்.
போதை பொருள் விற்ற
ஐந்து பேருக்கு 'காப்பு'
அம்பத்துார், ஒரகடம், காந்தி பிரதான சாலையில் கஞ்சா வைத்திருந்த புதுார், பானுநகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 24, என்பவரை கைது செய்த அம்பத்துார் போலீசார், 10,000 ரூபாய் மதிப்பு ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திரு.வி.க.நகர் எம்.எச்., சாலையில், 'ராபிடோ' ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில் 1.5 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா கடத்திய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பரத், 26, பிரசாந்த், 22, மற்றும் கிருஷ்ணசாமி, 18, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். சவுகார்பேட்டை, ஜெனரல் முத்தையா தெருவில் உள்ள பீடா கடையில், குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்த ஜியாலால், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணை கல்லால்
தாக்கிய வாலிபர் கைது
விருகம்பாக்கம்: தி.நகர் காவல்' மாவட்டத்தை சேர்ந்த 27 வயது பெண் செவிலியர், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரை காதலித்துவந்த ராமாபுரத்தைச் சேர்ந்த அன்பு, 25 பேசுவதை தவிர்ததுள்ளார். இதனால் அப்பெண், இம்மாதம் 27ல், அன்பு அலுவலகம் சென்றுள்ளார். அவரை வெளியே அழைத்து வந்த அன்பு, தகாத வார்த்தையால் பேசி, கீழே கிடந்த செங்கலால் அப்பெண்ணை தாக்கியுள்ளார். செவிலியர் புகாரையடுத்து ராமாபுரம் போலீசார் அன்புவை கைது செய்தனர்.
பூனை, புறா கொலை?
வாலிபரிடம் விசாரணை!
பெரவள்ளூர்: பெரவள்ளூரைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 50. இவர் பொன்னேரி அருகே அனுப்பம்பட்டில் 'ஆத்விகா பவுண்டேஷன்' என்ற அமைப்பின் வாயிலாக, பூனை மற்றும் நாய்களை பராமரித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன், நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த பிரசாந்த், 24, என்பவர், தன் டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., வாகனத்தில் வைத்து, இறந்த இரண்டு பூனை மற்றும் நான்கு புறாக்களுடன், கே.சி.கார்டன் பகுதியில் சென்றுள்ளார்.
இதை பார்த்த சண்முகசுந்தரம், திரு.வி.க.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரை பிடித்து, பூனை மற்றும் புறாக்களை உணவுக்காக கொன்றாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவிக்கு 'டார்ச்சர்'
'இஸ்திரி' கடைக்காரர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்: தி.நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது கல்லுாரி மாணவி. இவர் வசிக்கும் தெருவில், 'இஸ்திரி' கடை நடத்தி வருபவர் நாகா, 33, இவர், மாணவி கல்லுாரிக்கு செல்லும்போது, பின்தொடர்ந்து சென்று மொபைல் போன் நம்பரை கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவியின் பெற்றோரும் நாகாவை கண்டித்துள்ளனர்.
கடந்த 26ம் தேதி, மாணவி தன் தாயுடன் எம்.ஜி.ஆர்., நகரில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நாகா, மாணவியை வழிமறித்து தகாத முறையில் நடந்துகொண்டார். இது குறித்த புகாரையடுத்து, அசோக் நகர் போலீசார், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த நாகா என்பவரை, நேற்று கைது செய்தனர்.

