ADDED : ஜூன் 28, 2026 02:07 AM
ரயிலில் அடிபட்டு இருவர் பலி
ஆவடி: திருவள்ளூர், பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 30; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் ஆவடி செக்போஸ்ட் அருகே, தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோகன், பெங்களூரு செல்லும் காமாக்யா விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தார்.
கிண்டி: ஒடிசாவைச் சேர்ந்த சிம்மன் சாகா சாலு, 52, கிண்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று, கிண்டி - பரங்கிமலை இடையே தண்டவாளத்தை ஒட்டி நடந்து சென்றபோது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார்.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
மாங்காடு: மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சர்வான், 39, அப்பகுதியில் 35 வயது பெண் வீட்டில் குளிப்பதை, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். மாங்காடு போலீசார் சர்வானை கைது செய்து, அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்ற இருவர் கைது
அண்ணா சாலை: ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதி தமிழ்செல்வன், 43, திருவல்லிக்கேணி சீனிவாசன், 28, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். இரு மொபைல் போன்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
தண்டவாள 'க்ளிப்' திருடிய 2 பேர் கைது
சென்னை: ராயபுரம் ரயில் நிலைய நடைமேடை நான்கு மற்றும் பணிமனை பகுதியில், ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தண்டவாளத்தில் பயன்படுத்தப்படும் 20 க்ளிப்புகளுடன், கொருக்குப்பேட்டை மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த ரூபேஷ், 19, மற்றும் கவியரசன், 19, ஆகியோர் பிடிபட்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமியை சீண்டியவர் கைது
தாம்பரம்: தாம்பரத்தைச் சேர்ந்த, ஐந்தாம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 40, என்பவர், மூன்று மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் தாய்க்கு பழக்கமான இவர், சிறுமிக்கு கொடுத்த தொல்லை உறுதியானதை அடுத்து, மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் சங்கரை கைது செய்தனர்.
பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை கண்ணன் தெருவைச் சேர்ந்த டில்லிராணி என்பவரிடம், வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி, விஜயசந்தர், 41, என்பவர் ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், அந்த இடம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதாக, மாநகராட்சியிடம் இருந்து 'நோட்டீஸ்' வந்துள்ளது. டில்லிராணி புகாரையடுத்து, விஜயசந்தரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடலில் சிறுவன் மாயம்
அண்ணா சதுக்கம்: கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் நசீர் பாஷா, 52; நெசவு தொழிலாளி. மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, உறவினர்கள் 54 பேருடன், சென்னை மெரினா கடற்கரைக்கு நேற்று மாலை சுற்றுலா வந்தார். குடிநீர் வாரிய அலுவலகம் எதிரே கடலில் குளித்தபோது, அவரது பேரன் முகமது உமர், 9, அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, சிறுவனை கடலில் தேடி வருகின்றனர்.
நகை பறித்த திருநங்கையர் கைது
சேலையூர்: சேலையூர், மப்பேடு புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 41. 'கிரைண்டர்' செயலியில் பழகிய இரு திருங்கையர், ஒன்றாக இருந்த வீடியோவை குடும்பத்தாரிடம் காட்டிவிடுவதாக மிரட்டி 6 சவரன் நகைகளை பறித்தனர். சேலையூர் போலீசார் விசாரித்து அலெக்சாண்டர், 28, ராசிக், 26, ஆகிய இரு திருநங்கையரை, நேற்று கைது செய்தனர்.
