UPDATED : ஆக 15, 2026 10:22 PM
ADDED : ஆக 15, 2026 09:03 PM
ஓட்டேரி: ஓட்டேரி ஏகாந்திபுரத்தில், வீட்டில் பதுக்கி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக, 17 மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், சபரி என்ற பெண், சிறுவர்களை பயன்படுத்தி மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய போலீசார், சபரியை தேடி வருகின்றனர்.
போதைப்பொருள் பதுக்கிய மூவருக்கு 'காப்பு'
வியாசர்பாடி: வியாசர்பாடி கல்யாணபுரத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை, வீட்டில் பதுக்கிய விஜயா, 42, ஸ்மிதா என்கிற சில்க், 38, மோகன், 30, ஆகிய மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட மாவா, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வரதட்சணை வழக்கில் தலைமறைவானவர் கைது
சைதாப்பேட்டை: மயிலாடுதுறை மாவட்டம், சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 52. இவர் மீது, 2011ம் ஆண்டு சைதாப்பேட்டை மகளிர் போலீசில் பதிவான வரதட்சணை கொடுமை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வந்தவர், பல ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். கடந்த மாதம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் அவரை, நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வி.சி.க., பேனரை கிழித்தவர் சிக்கினார்
புளியந்தோப்பு: உளுந்-துார்பேட்டையில் நாளை நடக்கவுள்ள தமிழ் தேசிய மாநாட்டிற்காக, புளியந்தோப்பு, படாளம் ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பில், வி.சி.க., சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை, கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். விசாரித்த புளியந்தோப்பு போலீசார், மனோஜ், 24, என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், மது போதையில் பேனரை கிழித்தது தெரிந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மகனை கத்தியால் வெட்டிய தந்தை கைது
கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப், 45; மகன் முகமது ஷபி, 24. தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி மது போதையில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இருவரும், வீட்டுக்குள் மது போதையில் சண்டை போட்டுள்ளனர். இதில், முகமது யூசுப் கத்தியால் வெட்டியதில் தலையில் காயமடைந்த முகமது ஷபி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின்படி, விசாரணை நடத்திய கொடுங்கையூர் போலீசார், முகமது யூசுப்பை நேற்று கைது செய்தனர்.
மூதாட்டிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
கொடுங்கையூர்: கொடுங்கையூர் யூனியன் கார்பைடு காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, 63. இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு வசிக்கும் செல்வ சாலமோன், 23, என்பவரிடம், இரண்டு மாத வாடகை கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் செல்வ சாலமோனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே நான்கு குற்ற வழக்குகள் உள்ளன.
