ADDED : செப் 06, 2026 04:51 AM

விரைவு ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி ஆவடி: அண்ணனுார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், நேற்று இறந்து கிடந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது, ஆவடி ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தொட்டியில் இருந்து விழுந்து சிறுவன் காயம் வேளச்சேரி: வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாம்மார்கீஸ், 17. தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர். தன் வீட்டின் இரண்டாவது மாடியில், தண்ணீர் தொட்டியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என, நேற்று காலை எட்டி பார்த்தார். அப்போது, தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிண்டி, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
லாரி மோதி முதியவர் பலி புழல்: திருமுல்லைவாயில், அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் சையத் அஜ்முதீன் காதிரி, 70; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். 'ஹெல்மெட்' அணிந்து, மதுரவாயல் மேம்பாலத்தில் புழல் நோக்கி, ஸ்கூட்டரில் நேற்று சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியதோடு, பின்பக்க டயர் அவரது தலை மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அஜ்முதீன் காதிரி உயிரிழந்தார். மாதவரம் போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுநரான, தஞ்சாவூரைச் சேர்ந்த வாசு, 53, என்பவரை நேற்று கைது செய்தனர்.
பெண்ணை சீண்டிய வாலிபர் கைது கோயம்பேடு: நெற்குன்றத்தைச் சேர்ந்த 23 வயது பெண், வீட்டு வாசலில் நேற்று முன்தினம் கோலமிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், பெண்ணிடம் ஆபாச செயலில் ஈடுபட்டு தப்பி சென்றார். கோயம்பேடு மகளிர் போலீசார் விசாரித்து, பெண்ணை சீண்டிய மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அஸ்லாம் மாலிக், 22, என்பவரை நேற்று கைது செய்தனர்.
அடையாறு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட, வேளச்சேரியைச் சேர்ந்த, ஜானகிராமன், 29, என்பவரை நேற்று கைது செய்தனர்.
கூலி தொழிலாளி தற்கொலை திருவொற்றியூர்: திருவொற்றியூர் டி.எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் நவீன், 35; கூலி தொழிலாளி. முதல் மனைவி பிரிந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். குடிப்பழக்கத்தால், அவரது இரண்டாவது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் விரக்தியடைந்த நவீன், நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் கொளத்துார்: கொளத்துாரில் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் விற்பனை செய்வதாக, துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருமுல்லைவாயில் ஜெயராம் நகரை சேர்ந்த டேனியல், 21, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், 'ஆன்லைனில்' மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
தலைமறைவு குற்றவாளி பிடிபட்டார் புளியந்தோப்பு: வியாசர்பாடி, கன்னிகாபுரம் பகுதியில் கடந்த மாதம் 25ம் தேதி, புளியந்தோப்பு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, போதை மாத்திரைகள் விற்றதாக மேத்யு, 19, பூபாலன், 28, ஆகிய இருவரை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த 'கோட்டை' மணிகண்டன், 24, என்ற ரவுடியை போலீசார் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில், நேற்று கைது செய்தனர்.
