ஒப்பந்த அடிப்படையில் 512 நர்ஸ் மருத்துவமனைகளில் நியமிக்க முடிவு
ஒப்பந்த அடிப்படையில் 512 நர்ஸ் மருத்துவமனைகளில் நியமிக்க முடிவு
ADDED : செப் 13, 2026 06:02 PM
சென்னை: சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில், 512 தற்காலிக செவிலியர்கள் பணியிடங்களுக்கு தகுதியானோர், வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி மாநகர நலச்சங்கம் வாயிலாக, மாநகராட்சி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில், 512 தற்காலிக செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி, இவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடத்திற்கு, 50 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகளில் பயின்று, செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்று, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை, www.chennaicorporation.gov.in அல்லது https://nhm.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சுய கையொப்பமிட்ட சான்று ஆவணங்களுடன், ‘மாநகர நல அலுவலர் / உறுப்பினர் செயலர், சென்னை மாநகர நலச்சங்கம், பொது சுகாதாரத்துறை, 3ம் தளம், அம்மா கட்டடம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, சென்னை – 600003’ என்ற முகவரியில், செப்., 25ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
