ADDED : ஜூன் 11, 2025 02:57 AM
சென்னை:ஊதிய உயர்வு கோரி நடைபயணத்தில் ஈடுபட உள்ள அரசு டாக்டர்களுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரசு டாக்டர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் கொரோனாவில் உயிரிழந்த டாக்டரின் குடும்பத்திற்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்களின் சட்ட போராட்டக் குழுவினர், சேலம் மேட்டூரில் இருந்து சென்னை வரை, இன்று முதல் நடைபயணம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு, நா.த.க., ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் தி.மு.க., அரசு, மக்களை காப்பாற்றும் பணியில் உள்ள டாக்டர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க மறுக்கிறது. அரசு டாக்டர்களுக்கு முறைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
மருத்துவமனைகளில் போதியளவு டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு, நா.த.க., தோள் கொடுத்து துணை நிற்கும்.
அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அவர்கள் எடுக்கும் மென்னெடுப்புகளுக்கும் ஆதரவாக இருப்போம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.