/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி தந்தை-, மகன் கைது
/
ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி தந்தை-, மகன் கைது
ADDED : நவ 03, 2025 01:52 AM
மடிப்பாக்கம்: தொழில் துவங்குவதற்காக, உறவினரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
மடிப்பாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் சுகந்தி, 57. இவர், மடிப்பாக்கம் போலீசில், கடந்த செப்டம்பரில் அளித்த புகார்:
கடந்த 2019ம் ஆண்டு, தன் கணவர் ரமேஷ்குமாரின் அக்கா சரளாதேவி, அவரது கணவர் குணசேகர், அவர்களின் மகன் விஜய் ஆகியோர், விடுதி நடத்துவதற்காக, என் கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கினர். லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறினர்.
இதையடுத்து, திருவான்மியூரில் உள்ள வீட்டை விற்று, அதில் வந்த பணத்தில், ஒரு கோடி ரூபாயை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் சரளாதேவி குடும்பத்தினரிடம் கொடுத்தேன்.
சில மாதங்கள் மட்டும், லாபத்தில் பங்காக வங்கியில், 75,000 ரூபாய் செலுத்தினர்.
பின், கொரோனா காலத்தில் நஷ்டம் எனக்கூறி, பணமும் கொடுக்கவில்லை. 2020 - 2023ம் ஆண்டு வரை, மாதம் 40,000 ரூபாய் மட்டும் வட்டி பணம் எனக்கூறி செலுத்தினர். அதன் பின், மீதி பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர்.
பணத்தை திரும்ப கேட்டபோது மூவரும் தகாத வார்த்தைகளால் பேசி எங்களை மிரட்டினர். எனவே, மூவர் மீதும் நடவடிக்கை எடுத்து, தர வேண்டிய மீதி பணம், 98.3 லட்சம் ரூபாயை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரித்த மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார், பள்ளிக்கரணையைச் சேர்ந்த குணசேகர், 67, அவரது மகன் விஜய், 36, ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும். விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். சரளாதேவியிடம் பெண் போலிசார் மூலம் விசாரணை நடந்து வருகிறது என, போலீசார் தெரிவித்தனர்.

