/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் போர் விமானங்கள் வர்ணஜாலம்
/
மெரினாவில் போர் விமானங்கள் வர்ணஜாலம்
ADDED : அக் 05, 2024 12:13 AM

சென்னை,இந்திய விமான படையின் 92ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், நாளை காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, விமான படையின் பிரமாண்ட வான்வெளி சாகசம் நடக்க உள்ளது.
இதன் முன்னோட்டமாக, நேற்று காலை மெரினாவில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய வகை ஜெட் விமானங்கள் கொண்டு, நிகழ்ச்சி விறுவிறுப்பாக நிகழ்த்தப்பட்டது.
முதலில், வான் சாகசத்திற்கென பிரத்யேகமாக செயல்படும் 'ஆகாஷ் கங்கா' அணியினர், நான்கு ஹெலிகாப்டர்களில் வானில் வட்டமடித்து ஜாலம் காட்டினர். பாராசூட் கொண்டு, கடற்கரையில் குதித்தனர்.
தொடர்ந்து, 'ஸ்கை டைவிங்' செய்வதில் பிரபலமாக விளங்கும், 'சூர்யகிரண் ஏரோபாட்டிக்' அணியினரின், நிமிடத்திற்கு நிமிடம் மாறி மாறி செய்த சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பின், உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட 'சாரங்' ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு துவங்கியது. அதனுடன், 'சேட்டக்' ரகத்தைச் சேர்ந்த நான்கு ஹெலிகாப்டர்களில் 8,000 அடி உயரத்தில் இருந்து வீரர்கள் பாராசூட் பயன்படுத்தி குதித்தனர். கைகளில் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தியடி, அவர்கள் சாகசம் நிகழ்த்தினர்.
அதேபோல், 'எம்.ஐ., 70' ரக ஹெலிகாப்டரில் வானில் இருந்து குதித்த கமாண்டோ வீரர்கள், தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பது போன்ற சாகசங்களை செய்து அசத்தினர்.
ஒத்திகையாக இருந்தாலும், போர்ச்சூழலில் எப்படி செயல்படுவரோ அதைபோலவே இதில் துடிப்புடன் பங்கேற்றனர்.
இவற்றை பார்க்க, ஆயிரக்கணக்கானோர் மெரினாவில் குவிந்தனர். அவர்கள், உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை ஆங்காங்கே அமர்ந்தபடியும், நின்றபடியும், சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, இந்திய விமானப் படை ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது:
விமான சாகச நிகழ்ச்சி, மறக்க முடியாத அனுபவமாக மக்களுக்கு இருக்கும். விமான படையில் இளைஞர்கள் சேருவதற்கு ஊக்கமாகவும் இந்நிகழ்ச்சி இருக்கும்.
மெரினா கடற்கரையின் பரப்பளவு அதிகம் என்பதால், இந்நிகழ்ச்சியை நடத்துவதில் வசதியாக உள்ளது.
இந் நிகழ்ச்சிக்கு வருவோர், உணவு பொருட்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். கடற்கரையில் வீசும் உணவுகளை சாப்பிட பறவைகளுக்கு வரும். அவற்றால் விமானிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, அவற்றுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.