/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலகத்தைவிட மிகப்பெரியவர் கடவுள்: சிருங்கேரி சன்னிதானம் அருளுரை
/
உலகத்தைவிட மிகப்பெரியவர் கடவுள்: சிருங்கேரி சன்னிதானம் அருளுரை
உலகத்தைவிட மிகப்பெரியவர் கடவுள்: சிருங்கேரி சன்னிதானம் அருளுரை
உலகத்தைவிட மிகப்பெரியவர் கடவுள்: சிருங்கேரி சன்னிதானம் அருளுரை
ADDED : நவ 03, 2024 12:45 AM

சென்னை,''இந்த உலகத்தைவிட மிக மிக பெரியவர் கடவுள்; அவர் என்றும், எங்கும், எப்போதும் இருப்பவர்,'' என்று, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் தெரிவித்தார்.
சென்னையில், அக்., 28முதல் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சன்னிதானம், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சுதர்மா இல்லத்தில் முகாமிட்டுள்ளார்.
கும்ப மரியாதை
ஆறாவது நாளான நேற்று காலை 8:00 மணிக்கு வேத பண்டிதர்கள் நடத்திய சகஸ்ர சண்டி பாராயணத்தில் அவர் பங்கேற்றார்.
பின், காலை 10:00 மணிக்கு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, ஸ்ரீஅய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம்செய்தார். அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
அங்கிருந்து, அடையாறு ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கு சென்ற சன்னிதானத்தை, கோவில் நிர்வாகி சீனிவாசராவ் உள்ளிட்டோர், பூர்ணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அங்கு பட்டாடைகள், மலர் மாலைகள் சமர்ப்பணம் செய்து வழிபட்டார்.
அதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் பிரதோஷ மண்டபம் கட்டுமான பணிக்கு, சிருங்கேரி சன்னிதானம் அடிக்கல் நாட்டினார். அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.
பின், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் சன்னிதானம் வழங்கிய அருளுரை:
அடையாறு ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 'எல்லோருக்கும், எப்போதும் நல்லது நடக்க வேண்டும். அனைவருக்கும் இறையருள் கிடைக்க வேண்டும்' என, பிரார்த்தனை செய்தோம். பரம்பரையாக கடவுளை வழிபட்டு வரும் சம்பிரதாயத்தில், நாம் பிறந்திருக்கிறோம்.
'அனந்தம்' என்றால் அளவே இல்லாதது என்று பொருள். கடவுளின் உருவச் சிலைகளுக்கு ஒரு அளவு உள்ளது. ஆனால், கடவுள் அளவே இல்லாதவன். அப்படி அளவே இல்லாமல் அருள் பாலிப்பவர் அனந்தபத்மநாப சுவாமி. கடவுள்தான் இந்த உலகத்தை உருவாக்கினார்.
மிகப்பெரிய இந்த உலகத்தைவிட, கடவுள்மிகமிகப் பெரியவர். கடவுளுக்கு காலமும் இல்லை. அவர் எங்கும், எக்காலமும் இருப்பவர்.
தங்கத்தில் இருந்து மோதிரம், கிரீடம் போன்ற ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. மோதிரம் வேறு; கிரீடம் வேறு. ஆனால், மோதிரம் வேறு, தங்கம் வேறு என்று சொல்ல முடியாது.
அதுபோல, பரம்பொருள் வேறு, கடவுள் வேறல்ல. அளவே இல்லாத, காலமே இல்லாத அனந்த ரூபமாக அனந்தபத்மநாப சுவாமி இங்கு அருள்புரிந்து வருகிறார்.
அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கும், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்திற்கும் ஆரம்பம் முதலே நெருங்கிய தொடர்பு உள்ளது. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின், 35வது பீடாதிபதியாக இருந்த அபிநவ வித்யாதீர்த்தர், இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
என் குருநாதர் ஸ்ரீபாரதீதீர்த்த மகாசுவாமிகளும், இங்கு பலமுறை வந்துள்ளார்.
அனைவருக்கும் அருள்
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கு வந்து, என் குருநாதர் ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகளின் பெயரில் கட்டப்படவுள்ள பிரதோஷ மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனந்தபத்மநாப சுவாமி கோவில் நிர்வாகி சீனிவாச ராவ், 98 வயதிலும் மிகச்சிறப்பாக கோவிலை நிர்வகித்து வருகிறார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில், 100 வயதை தொடப்போகும் அவர், 'இக்கோவில் உருவான வரலாறு குறித்து புத்தகம் எழுதப் போகிறேன். அதற்கு ஆசியளிக்க வேண்டும்' என கேட்டார். அவரின் இந்த உற்சாகம் வியக்க வைக்கிறது. அவருக்கு எனது பரிபூரண ஆசிர்வாதம். அனைவருக்கும் கடவுளின் அருள் கிடைக்கட்டும்.
இவ்வாறு சிருங்கேரி சன்னிதானம் அருளுரை ஆற்றினார்.