/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நவ., 27க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு
/
வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நவ., 27க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு
வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நவ., 27க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு
வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நவ., 27க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 30, 2025 12:34 AM
சென்னை:'சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை, நவ., 31க்குள் முடிக்க வேண்டும்' என, தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் சார்பில், பெரிய உணவகமும் நடத்தப்படுகிறது.
ஆனால், இந்த கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்க தற்போது நிர்வாகிகள் இல்லை. தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் சங்கம் இயங்கி வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கூட்டுறவு சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சங்க தேர்தலை நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வி.ஆனந்த் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சங்க தேர்தலை நடத்த மூத்த வழக்கறிஞர் வி.ஜெயராமன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் முன்னாள் செயலர் வி.ஆர்.கமலநாதன், லா அசோசியேஷன் முன்னாள் தலைவர் டி.வி.கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் வி.நளினி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டது.
'இந்த குழு, வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தர வேண்டும். அதை ஆய்வு செய்தபின், மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்' என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் நியமித்த குழு, தன் பணியை முடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, தேர்தலை நடத்தும்படி உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் வி.ஆனந்த் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி, ''ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழு, வாக்காளர்களை ஆய்வு செய்து, பட்டியலை தேர்தல் அதிகாரியிடம் வழங்கியுள்ளது,'' என்றார்.
தமிழக அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் கீதா தாமரைசெல்வன் ஆஜராகி, ''வாக்காளர் பட்டியல் இன்னும் தேர்தல் அதிகாரியிடம் தரப்படவில்லை,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குழுவில் இடம்பெற்ற மூத்த வழக்கறிஞர் இறந்து விட்டதால், தற்போது குழுவில் உள்ள ஜி.மோகனகிருஷ்ணன், குழு உறுப்பினர்கள் வி.ஆர்.கமலநாதன், டி.வி.கிருஷ்ணகுமார், வி.நளினி ஆகியோர் கையெழுத்திட்டு, வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
சிறப்பு அதிகாரி, அந்த பட்டியலை வாங்கி, அக்., 25க்குள் ஆய்வு செய்ய வேண்டும். பின், தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அதிகாரி, நவ., 27க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.