/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்தார் படேல் சாலை 6 வழியாக விரிவாக்கம் 370 மரங்களை வெட்டும் நெடுஞ்சாலை துறை 200 மரங்கள் மறுநடவு; புதிதாக 1,700 கன்றுகள் நட முடிவு
/
சர்தார் படேல் சாலை 6 வழியாக விரிவாக்கம் 370 மரங்களை வெட்டும் நெடுஞ்சாலை துறை 200 மரங்கள் மறுநடவு; புதிதாக 1,700 கன்றுகள் நட முடிவு
சர்தார் படேல் சாலை 6 வழியாக விரிவாக்கம் 370 மரங்களை வெட்டும் நெடுஞ்சாலை துறை 200 மரங்கள் மறுநடவு; புதிதாக 1,700 கன்றுகள் நட முடிவு
சர்தார் படேல் சாலை 6 வழியாக விரிவாக்கம் 370 மரங்களை வெட்டும் நெடுஞ்சாலை துறை 200 மரங்கள் மறுநடவு; புதிதாக 1,700 கன்றுகள் நட முடிவு
ADDED : பிப் 28, 2026 05:34 AM

சென்னை: சென்னை அடையாறு சர்தார் படேல் சாலை விரிவாக்கப் பணியை துவக்கியுள்ள நெடுஞ்சாலைத் துறை, பசுமை நிறைந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையின் மையப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஒன்றாக சர்தார் படேல் சாலை, 60 அடி அகலம் கொண்டது.
இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அடையாறு பகுதியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து அடையாறு, ஓ.எம்.ஆர்., நோக்கி செல்லும் வாகனங்கள், சர்தார் படேல் சாலை வழியாக செல்கின்றன.
இந்த சாலையில், கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதுவும், மேம்பாலத்தை ஒட்டி கோட்டூர்புரம் செல்லும் அணுகுசாலை, ஒரு பேருந்து மட்டுமே செல்லும் வகையில் குறுகலாக உள்ளது. அண்ணா பல்கலை நுழைவாயில் சாலையில் சிக்னல் போடும்போது, வாகன நெரிசல் சின்னமலை வரை நீடிக்கிறது.
இந்த நெரிசலை தடுக்க, ஐ.ஐ.டி., நுழைவாயில் முதல் கவர்னர் மாளிகை நுழைவாயில் வரை, 1.6 கி.மீ., துாரம், 100 அடியாக அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதற்காக, 48 கோடி ரூபாயில் பணி நடந்து வருகிறது.
மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், கல்வித்துறை, அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., கேன்சர் மருத்துவமனை, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் காந்தி மண்டபம் ஆகிய பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்து, தேவையான இடங்கள் சாலைக்காக எடுக்கப்படுகின்றன.
இந்த பணிகளுக்காக ஏராளமான மரங்களை, நெடுஞ்சாலைத் துறை வெட்டி சாய்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நுாறடி சாலையின் இரு பகுதிகளில், மழைநீர் வடிகால்வாயுடன் கூடிய தலா 6 அடி வீதம் நடைபாதை அமைகிறது. மழைநீர் அடையாறு ஆற்றில் செல்லும் வகையில் கட் டமைப்புகள் அமையும்.
தற்போதுள்ள சாலை மையத்தடுப்பு மாற்றி அமைக்கப்படும். கோட்டூர்புரம் செல்ல எளிதாக திரும்பும் வகையில், வளைவு சாலை அமைக்கப்படுகிறது.
சாலை விரிவாக்கத்திற்காக, வனத்துறை மற்றும் மாவட்ட பசுமை குழு அனுமதியுடன், 370 மரங்கள் அகற்றப்படுகின்றன. இதில், 200 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, அதே வளாகத்தில் நடப்படும்.
மீதமுள்ள 170 மரங்களுக்கு மாற்றாக, ஒரு மரத்திற்கு 10 மரக்கன்றுகள் வீதம், 1,700 மரக்கன்றுகள் வளாகத்தில் நட்டு பராமரிக்கப்படும்.
இடிக்கப்படும் தடுப்பு சுவருக்கு மாற்றாக, 10 அடி உயரத்தில் புதிய தடுப்புச்சுவர் கட்டப்படும். அனைத்து பணிகளும் முடிந்தால், நான்குவழியாக உள்ள சர்தார் படேல் சாலை, ஆறுவழி சாலையாக மாறும்; நெரிசலும் தீரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

