/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்களத்தூர் --- வண்டலூர் பாலம் தயார் 2 மாதத்தில்! நெடுங்குன்றம் பாதையில் தொடரும் இழுபறி
/
பெருங்களத்தூர் --- வண்டலூர் பாலம் தயார் 2 மாதத்தில்! நெடுங்குன்றம் பாதையில் தொடரும் இழுபறி
பெருங்களத்தூர் --- வண்டலூர் பாலம் தயார் 2 மாதத்தில்! நெடுங்குன்றம் பாதையில் தொடரும் இழுபறி
பெருங்களத்தூர் --- வண்டலூர் பாலம் தயார் 2 மாதத்தில்! நெடுங்குன்றம் பாதையில் தொடரும் இழுபறி
ADDED : பிப் 15, 2024 12:02 AM

பெருங்களத்துார் 'பெருங்களத்துாரில் இருந்து வண்டலுார் மார்க்கமான மேம்பாலப் பணிகள், இன்னும் இரு மாதங்களில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பெருங்களத்துாரில் இருந்து நெடுங்குன்றம் பகுதிக்கு செல்லக்கூடிய மேம்பாலப் பணி, நிலம் கையகப்படுத்தலில் வனத்துறையின் அனுமதி கிடைக்காததால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறி நிலையில் உள்ளது. இதனால் ஜி.எஸ்.டி., சாலையில் தினமும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை மாநகரின் நுழைவு வாயிலான பெருங்களத்துாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கடந்த 2020ல் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாலங்கள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன.
இந்த திட்டத்தில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கம்; பெருங்களத்துார் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராசிங் மேம்பாலம்; பெருங்களத்துாரில் இருந்து வண்டலுார் மற்றும் நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.
தொய்வு
கொரோனா தொற்று மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால், கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, 2022 செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வந்தது.
அடுத்த கட்டமாக, பெருங்களத்துாரில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதை, கடந்தாண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறைந்துள்ளது.
அதேபோல ரவுண்டானா பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. பெருங்களத்துார் - வண்டலுார் மார்க்கமான பாதை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இரண்டு மாதத்திற்குள் திறக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாதை திறந்தால், பெருங்களத்துாரில் நெரிசல் வெகுவாக குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
2 ஆண்டு காத்திருப்பு
ஆனால், பெருங்களத்துாரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்க மேம்பாலப் பணிகள், மிக தாமதமாக நடக்கின்றன.
இப்பாதை அமையவுள்ள இடத்தின் பெரும் பகுதிகள் வனத்துறைக்கு சொந்தமானவை. வனத்துறையின் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் நிலவுவதே, இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அனுமதி கேட்டு வனத்துறைக்கு நெடுஞ்சாலைத் துறையினர் கடிதம் எழுதினர். இரண்டு ஆண்டுகளுக்கு கிடப்பில் இருந்த பின், சில நாட்களுக்கு முன் தான், மத்திய வனத்துறைக்கு அனுப்பியுள்ளது.
மத்திய வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், அதற்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை செலுத்த, நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது.
மின்வாரிய இடம்
இந்த பாலத்தின் பணிகளுக்காக, இடையில் உள்ள துணை மின் நிலையத்தையும் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
துணைமின் நிலையத்திற்காக, மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளது. அந்த இடத்திற்கான மதிப்பு, 12 கோடி ரூபாயை நெடுஞ்சாலைத் துறை செலுத்தியுள்ளது.
அடுத்ததாக, துணை மின் நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான, 'ஷிப்டிங் சார்ஜ்' அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. இதற்கு, ஆறு மாதங்களாகும் எனக் கூறப்படுகிறது.
இக்காரணங்களால், நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பாதை பணியை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, நிலத்தை ஒப்படைக்கும் விஷயத்தில், மத்திய வனத்துறை அதிகாரிகளும், மாநில மின் வாரிய அதிகாரிகளும் அலட்சியம் காட்டாமல், விரைந்து செயல்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

