/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபாதை பணி கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் அடாவடி
/
ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபாதை பணி கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் அடாவடி
ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபாதை பணி கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் அடாவடி
ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபாதை பணி கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் அடாவடி
ADDED : அக் 24, 2025 02:06 AM

நந்திவரம்: நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள கண்டிகை தாங்கல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஏரியின் பரப்பை கூடுதலாக ஆக்கிரமிக்கும் வகையில், நகராட்சி சார்பில் நடைபாதை அமைக்கப்படுவதால் அப்பகுதிமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் 11.24 ஏக்கர் பரப்பில் கண்டிகை தாங்கல் ஏரி உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில், ஏரியின் மொத்த பரப்பில் 50 சதவீதம் கட்டடங்களாக மாறிவிட்டன. இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை சீரமைக்க கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 2024, செப்டம்பரில், 1.36 கோடி ரூபாய் செலவில் ஏரியை சீரமைக்கும் பணிகளை, நகராட்சி நிர்வாகம் துவக்கியது. ஏரியின் கரைகளை பலப்படுத்தி, தேங்கும் மழைநீரை மறுசுழற்சி செய்யவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், 12 மாதங்கள் முடிந்த பின்னரும், இதுவரை இந்த ஏரியில், துார்வாருதல் உள்ளிட்ட எவ்வித பணிகளும் நடக்கவில்லை. மாறாக, நடைபாதை அமைப்பதற்காக, ஏரியின் உட்பகுதியில் 15 அடி அகலம், 20 அடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு, ஏரியின் பரப்பு மேலும் ஆக்கிரமிக்கப்படுகிறது.
இதனால், கண்டிகை தாங்கல் ஏரியில் நீர் தேக்கும் பரப்பு குறைந்து, நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும். எனவே, ஏரியின் உட்பகுதியில் நடைபாதை அமைக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
ஏரியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அதைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கண்டிகை தாங்கல் ஏரி, மொத்தம் 11.24 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இதில் 6 ஏக்கர் பரப்பு முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, 5.24 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது. ஏரி சீரமைப்பு பணிகளும் நடக்கவில்லை; ஒதுக்கப்பட்ட பணம் என்னவானது என தெரியவில்லை.
மாறாக, ஏரிக்கரையோரம் உட்பகுதியில், 7 அடி அகலத்தில், 300 மீ., நீளத்தில், சிமென்ட் கற்கள் நடைபாதை அமைக்க, 15 அடி அகலத்தில், 20 அடி ஆழத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது. இதனால், ஏரியின் பரப்பளவு தற்போது இருக்கும் அளவை விட 20 சதவீதம் சுருங்கும்.
தொடர் ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பாதி பரப்பு சுருங்கிவிட்ட நிலையில், தற்போது மேலும் ஆக்கிரமிக்கும் விதமாக நடைபாதை அமைப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

