/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விருகையில் வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கு கார் ஓட்டுநர் உட்பட இருவர் நாங்குநேரியில் கைது கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
/
விருகையில் வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கு கார் ஓட்டுநர் உட்பட இருவர் நாங்குநேரியில் கைது கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
விருகையில் வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கு கார் ஓட்டுநர் உட்பட இருவர் நாங்குநேரியில் கைது கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
விருகையில் வழக்கறிஞர் கொல்லப்பட்ட வழக்கு கார் ஓட்டுநர் உட்பட இருவர் நாங்குநேரியில் கைது கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
ADDED : ஏப் 01, 2025 12:54 AM

விருகம்பாக்கம், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 43; வழக்கறிஞர். இவர், நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் வழக்கறிஞர் பிரிவில், முக்கிய நிர்வாகியாக இருந்தார்.
விருகம்பாக்கம், கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீடு வாடகைக்கு எடுத்து, அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கி இருந்தார். பூட்டி கிடந்த அவரது வீட்டில் இருந்து, நேற்று முன்தினம் கடும் துர்நாற்றம் வீசியது.
விருகம்பாக்கம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.
அவரது தலையில் வெட்டப்பட்ட கத்தியை, கொலையாளிகள் அப்படியே விட்டுச் சென்றிருந்தனர். உடல் முழுதும் காயங்கள் இருந்த காயங்கள், சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தது. போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், கொலை நடந்ததாக கூறப்படும் 27ம் தேதி, நான்கு பேர் வந்து சென்றது தெரியவந்தது. அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வெங்கடேசன், அவரது நண்பரான சேதுபதி என்பவருடன் சேர்ந்து, வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வந்தது தெரிய வந்தது. கடந்த மாதம், சேதுபதி மர்ம கும்பலால் நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், நிலப்பிரச்னை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக, சில நாட்களாக வெங்கடேசனின் அலுவலகத்தில் பேச்சு நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில், கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், வெங்கடேசனின் கார் ஓட்டுநராக இருந்த, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கார்த்திக் தலைமறைவானது தெரியவந்தது. நாங்குநேரி சென்ற தனிப்படை போலீசார், கார்த்திக், அவரது நண்பர் ரவி ஆகியோரை கைது செய்தனர்.
கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலையான வெங்கடேசனிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ரவி ஆகியோர், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
கார்த்திக் சில ஆண்டுகளுக்கு முன், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாசிடம் ஓட்டுனராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. நாங்குநேரியில் குற்ற வழக்கில் கைதாகி, சிறைக்கு சென்று திரும்பிய பின்னர், கார்த்திக்கை சென்னைக்கு அழைத்து வந்த வெங்கடேசன், தன் கார் ஓட்டுநராக வைத்துள்ளார்.
இந்த அலுவலகத்தில் மது அருந்துவது, வழக்கு சம்பந்தமாக ஆலோசனை செய்வது, பஞ்சாயத்து போன்றவற்றை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் வெங்கடேசன், கார்த்திக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கார்த்திக், கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி உள்ளார். உடலை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால், அங்கேயே போட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி தப்பி உள்ளனர்.
நில விவகாரத்தில் கிடைத்த பணத்தை சரிவர பிரித்து கொடுக்காததால், இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
பிடிபட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து, தொடர்ந்து விசாரணை நடத்தினால் கொலைக்கான காரணம் தெரிந்து விடும்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.