/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஹெராயின்' போதை வஸ்து விற்ற மே.வங்க வாலிபர் கைது
/
'ஹெராயின்' போதை வஸ்து விற்ற மே.வங்க வாலிபர் கைது
ADDED : ஏப் 15, 2025 12:40 AM

அம்பத்துார், அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, ஆவடியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக, தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார், ஆவடி, கோணாம்பேடு பகுதியில், நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு கட்டுமானம் நடைபெறும் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோஜம்மல் ஹோக், 21, என்பதும், ரயிலில் 'ஹெராயின்' போதைப் பொருள் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து, 20,000 ரூபாய் மதிப்பிலான 9 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து, நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
2 பேர் கைது
ஐஸ்ஹவுஸ் காவல் ஆய்வாளர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தபோது, 2.5 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் சிக்கியது.
விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக்கேயன், 27, சந்தோஷ், 20, என்பது தெரியவந்தது. போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், நேற்று இருவரையும் கைது செய்தனர்.