/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவு மின்தடை திருவொற்றியூரில் முற்றுகை
/
நள்ளிரவு மின்தடை திருவொற்றியூரில் முற்றுகை
ADDED : செப் 20, 2024 12:21 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மேற்கில் ஜோதி நகர், கலைஞர் நகர், கலைவாணர் நகர், சரஸ்வதி நகர், காட்டுப்பொன்னியம்மன் நகர் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட நகர்களில், 10,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஊழியர்கள் பற்றாக்குறையும் நிலவி வருவதால் மின்தடை, பழுது போன்ற பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. அடிக்கடி ஏற்படும் மின்தடையால், தேர்வுக்கு படிக்கும் மாணவ - மாணவியர் முதல், வயதான முதியவர்கள் வரை பாதிக்கின்றனர்.
இதனிடையே, நேற்று இரவு, 12:00 மணிக்கு வழக்கம் போல், காட்டுப்பொன்னியம்மன் நகர், சரஸ்வதி நகர், கலைஞர் நகர் போன்ற பல பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடைப்பட்டது. மின்தடை குறித்து காரணம் அறிவதற்காக, 100க்கும் மேற்பட்டோர், ஜோதிநகர் மின்வாரிய அலுவலகம் வந்தனர்.
அங்கு யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்தவர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாலை, 2:00 மணி வரை மின்தடை சரியாகாததால், ஜோதி நகர் - மணலி விரைவு சாலையில், ஸ்கூட்டர், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த சாத்தாங்காடு போலீசார், சமாதானம் செய்தனர். பின், அதிகாலை, 2:30 மணியளவில் மின்சேவை சீரானது.