/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய எக்மோ சங்கத்தின் தேசிய மாநாடு துவக்கம்
/
இந்திய எக்மோ சங்கத்தின் தேசிய மாநாடு துவக்கம்
ADDED : பிப் 08, 2026 05:52 AM

சென்னை: காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய, இந்திய எக்மோ சங்கத்தின் இரண்டு நாள் தேசிய மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது.
மாநாட்டை, எக்மோ சிகிச்சை நிபுணரும், இதயவியல் சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகருமான மதன்குமார், மூத்த ஆலோசகரும், குழந்தைகள் மருத்துவ சிகிச்சை நிபுணருமான இந்திரா ஜெயகுமார், காவேரி மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
மாநாட்டில், டாக்டர் மதன்குமார் பேசுகையில், ''எக்மோ என்பது, தற்போது ஒரு கடைசி முயற்சியான சிகிச்சையாக இல்லாமல், நவீன தீவிர சிகிச்சையில், ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகிறது,'' என்றார்.
காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், ''காவேரி மருத்துவமனை, உலகத்தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு, வலுவான மருத்துவ நிபுணத்துவம், தொடர்ச்சியான கற்றல், உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
''இம்மாநாட்டை ஆதரிப்பதும், நடத்துவதும், பிராந்தியம் முழுதும் உள்ள நோயாளிகளுக்கு, மேம்பட்ட உயிர்காக்கும் தொழில்நுட்பங்களை அணுக கூடியதாக, மாற்றுவதற்கான எங்கள் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது,'' என்றார்.
இந்த மாநாட்டுடன், தென்மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்கா பிரிவின், 'எக்ஸ்ட்ரா கார்போரியல் லைப் சப்போர்ட் ஆர்கனைசேஷனின்' 12ம் ஆண்டு சர்வதேச மாநாடும் இணைந்து நடத்தப்படுகிறது.
மாநாட்டில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மேம்பட்ட உயிர் - பராமரிப்பு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மையமாக, சென்னை வளர்ந்து வருவதை சுட்டிக் காட்டினர். இரண்டு நாள் மாநாடு, இன்று நிறைவடைகிறது.

