ADDED : நவ 08, 2025 02:35 AM
சென்னை: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, கடற்படை சார்பில் நேற்று, மியூசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்திய கடற்படை இசைக்குழு லெப்டினண்ட் கமாண்டர் ஏ.பிரதீப் குமார் தலைமையில் நடந்த இசை நிகழ்ச்சியில், தேச பக்தி பாடலான வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு தேசபக்தி பாடல்களுடன், தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழித் திரைப்படங்களில், புகழ்பெற்ற பாடல்களும் இசைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளுக்கான கடற்படை தலைவர் ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் பேசியதாவது:
உலகில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இங்கு போதைப் பொருள் புழக்கத்தின் வாயிலாக, அவர்களின் திறனை குறைக்க சதி நடக்கிறது.
இளைஞர்கள் அத்தகைய சதிகளுக்கு இரையாகாமல், விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

