ADDED : செப் 08, 2025 06:17 AM
மாலில் ரகளை
மர்ம நபரால் சலசலப்பு
அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில், நேற்று காலை காரில் வந்த வாலிபர், திடீரென வளாகத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினார். ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பியவர், மீண்டும் பொருட்களை சேதப்படுத்தினார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிய வந்ததால், அமைந்தகரை போலீசார் அந்த நபரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.
அழுகிய நிலையில்
வாலிபர் உடல் மீட்பு
வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், 16வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவராமன், 40. இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசவே, வீட்டின் உரிமையாளர் அலமேலு, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து, அழுகிய நிலையில் இருந்த சிவராமன் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
கத்தியுடன்
சுற்றித்திரிந்த
இருவர் கைது
கொடுங்கையூர், 61வது தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய், 19. இவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல, புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 24. இவர் மீதும் இரு வழக்குகள் உள்ளன. இருவரும் டிக்காஸ்டர் சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்து, பொதுமக்களை அச்சுறுத்துவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.