/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாம்பாக்கம் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
/
மாம்பாக்கம் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
மாம்பாக்கம் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
மாம்பாக்கம் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : அக் 11, 2024 12:21 AM

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியின் ஆறு வார்டுகளில் 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கடந்த 2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வில் இருந்த வீராசாமி என்பவர் தலைவராக வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஒரே மாதத்தில், அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடையே கருத்தொற்றுமை இல்லாமல், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாகவும், நிதி முறைகேடு செய்வதாகவும் புகார் எழுந்தது.
தவிர, ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து, 1, 2, 5வது வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர் மீது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
கலெக்டர் உத்தரவின்படி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விசாரித்த பின், ஊராட்சி தலைவரின் காசோலை பயன்படுத்தும் அதிகாரம், கடந்த ஆண்டு செப்., மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஊராட்சி தலைவர் வீராசாமி, தி.மு.க.,விலிருந்து விலகி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து, வார்டின் ஆறு கவுன்சிலர்களும் சேர்ந்து, ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற, கலெக்டர் அருண்ராஜியிடம் மனு அளித்தனர்.
வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா தலைமையில், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக சிறப்பு கூட்டம், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
இதில், துணைத் தலைவர் உள்ளிட்ட ஆறு வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்று, ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லை என, தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் கையெழுத்திட்டு வழங்கினர்.
முற்றுகை
இதற்கிடையில், ஊராட்சி தலைவர் வீராசாமி, பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோருடன், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
ஊராட்சி தலைவர் வீராசாமி கூறியதாவது:
நிதி முறைகேடு செய்தேன் என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை. தி.மு.க.,வில் இருந்து விலகி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டேன்.
அதனால், என் தலைவர் பதவியை பறிக்க வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியில், பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.