sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்!  போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை

/

வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்!  போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை

வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்!  போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை

வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி... என்கவுன்டர்!  போலீசுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொலை


ADDED : செப் 19, 2024 12:14 AM

Google News

ADDED : செப் 19, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போலீசாருடன் நேற்று அதிகாலை நடந்த சண்டையில், வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார். காரில் துரத்திச் சென்ற போது, கள்ளத்துப்பாக்கியால் காக்காதோப்பு பாலாஜி சுட்டதால், தற்காப்பு நடவடிக்கையாக சுட்டதில் அவர் குண்டு பாய்ந்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை பாரிமுனை, பந்தர்நாயக்கன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி, 44; கொடூர குற்றங்களை செய்யும், 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடியாக அடையாளப்படுத்தப்பட்டவர். இவர் மீது, ஆறு கொலைகள், 17 கொலை முயற்சி என, 59 வழக்குகள் உள்ளன.

இவரை, வியாசர்பாடி அருகே நேற்று அதிகாலை, கொடுங்கையூர் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

ரவுடி பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து, சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ்குமார் கூறியதாவது:

சென்னை எம்.கே.பி., நகர் காவல் நிலைய எல்லையில், முல்லை நகர் சிக்னல் பாலம் அருகே, எஸ்.ஐ., நாதமுனி, காவலர் சுகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 4:32 மணிக்கு, அவ்வழியே புதுச்சேரி பதிவு எண்ணுடன் வந்த சாம்பல் கலர் காரை நிறுத்தினர்.

ஓட்டுனர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த, ஓட்டேரியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை கீழே இறங்கச் செய்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

ஓட்டுனர் சீட்டில் இருந்த காக்கா தோப்பு பாலாஜி, காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பினார்.

இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.ஐ., நாதமுனி தகவல்தெரிவித்தார். 'வாக்கி டாக்கி' வாயிலாக சென்னை முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த தகவல், எம்.கே.பி., நகர் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தெரியவந்தது. அவர், சம்பந்தப்பட்ட கார் முல்லை நகரில் இருந்து வியாசர்பாடியை நோக்கிச் செல்வதை அறிந்து, காரில் பாலாஜியை பின் தொடர்ந்தார். இவருக்கு பின்னால், மற்றொரு வாகனத்தில் எஸ்.ஐ., மற்றும் காவலர் சென்றனர்.

ரவுடி பாலாஜியின் கார், காலை 4:50 மணிக்கு வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே, கைவிடப்பட்ட பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வளாகத்தின் முட்டு சந்தில் சிக்கிக்கொண்டது.

வேறு வழியின்றி காரில் இருந்து இறங்கிய பாலாஜி, கை துப்பாக்கியால் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை நோக்கி திடீரென சுட்டார். அந்த குண்டு, இன்ஸ்பெக்டர் காரின் முன் பக்க கண்ணாடியை துளைத்து வெளியேறியது.

அவரை எச்சரித்தவாறு, காரில் இருந்து இன்ஸ்பெக்டர் இறங்க முயன்றார். பாலாஜி மற்றொரு முறை சுட்டதில், காரின் இடது பக்க கதவில் துளையிட்டது.

இதனால், தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள இன்ஸ்பெக்டர் சரவணன், அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

குண்டு, அந்த நபரின் இடது பக்க மார்பு பகுதியில் பாய்ந்தது. குண்டடிபட்டு பாலாஜி சரிந்து விழுந்தார். அதற்குள், சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ., மற்றும் காவலர்பரிசோதனை செய்தபோது, பாலாஜிக்கு மூச்சு இருந்துள்ளது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டரின் காரில் பாலாஜியை ஏற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், வரும் வழியிலேயே பாலாஜி உயிரிழந்தது தெரிந்தது.

பாலாஜியின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

என்கவுன்டர் குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலாஜியிடம் இருந்து கார், வீச்சரிவாள், நாட்டு துப்பாக்கி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இணை கமிஷனர் பிரவேஷ்குமார் கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவர், கடந்த ஜூலை 14ம் தேதி என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு ரவுடி கொல்லப்பட்டுள்ளார்.

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி, ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். சிறு வயதில் இருந்தே அடிதடி, சிறிய வகை குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். பின், வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன் தொடர்பால் கொலை, ஆள் கடத்தல், அடிதடிகளில் ஈடுபட்டு, போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றார். தன்னை கண்டால் அனைவரும் பயப்பட வேண்டும் என, பாலாஜிக்கு ஆசை வந்துள்ளது. யுவராஜ், இன்பராஜ் என்ற ரவுடிகளுடன் சேர்ந்து, மாமூல் வசூலிக்க துவங்கினார். இவர்கள் மூவரும், சென்னை மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் அண்ணன் புஷ்பா என்பவரை கொலை செய்தனர். அதுதான், பாலாஜியின் முதல் கொலை.பின், தொழில் போட்டி காரணமாக, தன் கூட்டாளி யுவராஜையும் பாலாஜி கொலை செய்தார். சிறையில் இருந்த போது, ரவுடிகள் நடராஜன், மணல்மேடு சங்கரின் நட்பு கிடைத்தது. இவர்களின் ஆதரவுடன், மாமூல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் வசூலித்தல் போன்றவற்றில் அடாவடியாக இறங்கியுள்ளார். வட சென்னையைச் சேர்ந்த பில்லா ரமேஷ் என்பவரை, அவரது வீட்டின் கூரையை உடைத்து உள்ளே இறங்கி, அவரது மனைவி கண்முன், பாலாஜியும், அவரின் கூட்டாளிகளும் வெட்டி கொலை செய்தனர். அதே நாளில் ரவுடி விஜி என்பவரையும் பாலாஜி கொலை செய்தார். இந்த இரட்டை கொலைகள், வடசென்னை பகுதியில் பீதியை ஏற்படுத்தின.இக்கொலைகளுக்கு பின்னர், ரவுடிகள் மத்தியிலும் பாலாஜி பெரிய தாதாவாக உருவெடுத்தார். அவருக்கென கும்பல் சேர்த்து, பழைய தொழில்களுடன், செம்மரக்கட்டை கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.பின், 2021ல் கஞ்சா வழக்கில் கைதான பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளி வந்த பின், ஆந்திராவில் பதுங்கி இருந்த பாலாஜி, அவ்வப்போது சென்னைக்கு வந்து, கஞ்சா, செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



பரம எதிரி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகதலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், வட சென்னையைச் சேர்ந்த ரவுடி 'சம்பவம்' செந்தில் பதுங்கி இருக்கும் இடத்தைகூட, தனிப்படை போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை. ஆனால், சம்பவம் செந்திலின் பரம எதிரியாக விளங்கி வந்துள்ளார் காக்கா தோப்பு பாலாஜி. இதனால், சம்பவம் செந்திலையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.தன் உயிருக்கு குறி வைத்த தாடி சுரேஷ், பொக்கை ரவி, பாலாஜி உள்ளிட்டோரை தீர்த்துக்கட்ட, சம்பவம் செந்தில் 'ஸ்கெட்ச்' போட்டார். மற்ற இருவரையும் சம்பவம் செந்தில் தீர்த்துக்கட்ட, பாலாஜி மட்டும் உயிர் தப்பினார். கடந்த, 2020, மார்ச் 7ல், பாலாஜியும், தென் சென்னையைச் சேர்ந்த ரவுடி 'சிடி' மணியும், அண்ணா சாலையில் ஒரே காரில் சென்றனர். அப்போது, செந்தில் தன் கூட்டாளிகளை அவர்கள் மீது ஏவினார். தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே கார் மீது, செந்திலின் கூட்டாளிகள் வெடிகுண்டுகளை வீசி தீர்த்துக்கட்ட முயற்சித்தனர். ஆனால், பாலாஜியும், மணியும் சினிமா பாணியில் ரூட்டை மாற்றி உயிர் தப்பினர்.



தன் மகன் திருந்து வாழ்ந்து வந்த நிலையில், அவரை போலீசார் சுட்டுக் கொன்றதாக, காக்கா தோப்பு பாலாஜியின் தாய், கண்மணி, 65, குற்றம்சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சிறையில் நடந்த தகராறு தொடர்பாக 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, இரண்டு போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் வீட்டிற்கு வந்து விசாரித்து சென்றனர். ஜாமினில் இருந்த என் மகன், 10 நாட்களாக வேலுார் நீதிமன்றத்தில் கையெழுத்திடுவதற்காக சென்று வந்தார். வரும், 24ல் அந்த வழக்கில் இறுதி உத்தரவு வர உள்ளது. பத்து ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் இருந்த என் மகனை, போலீசார் சுட்டு கொன்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்துள்ளான் என் மகன். கடந்த மாதம்தான் அவனது பிறந்த நாள். அதை முன்னிட்டு பலருக்கு அன்னதானம் செய்துள்ளான்.இவ்வாறு கண்மணி கூறினார்.








      Dinamalar
      Follow us