/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபராதம் வசூலிக்க வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
/
அபராதம் வசூலிக்க வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
ADDED : டிச 25, 2024 11:57 PM

மதுரவாயல், சென்னை மாநகராட்சி சார்பில், சாலையில் குப்பை கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, கால்நடைகளை சாலையில் விடுவது உள்ளிட்டவற்றுக்கு, 'ஸ்பாட் பைன்' வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் என, அனைத்து அதிகாரிகளுக்கும் பி.ஓ.எஸ்., கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஒவ்வொரு மண்டலத்திலும் பறக்கும் படை வாகனங்கள் வாயிலாகவும், அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கருவி வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு அதிகாரியும், தினந்தோறும் 25 பணப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டும் என, இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டுக்கு உட்பட்ட மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனி முதல் பிரதான சாலையில் உள்ள கடைகளில் சோதனை நடத்த மாநகராட்சி அதிகாரிகள் பறக்கும் படை வாகனங்களில் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், மாநகராட்சி பறக்கும் படை வாகனத்தை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சமரசம் பேசியதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளை விடுவித்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி அதிகாரிகள், தினமும் கடை திறக்கும் போது வந்து, விதிமுறைகளை மீறி ஏதாவது காரணம் கூறி, 1,000 - 5,000 என, அபராதம் விதிக்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கேட்டால், கடையை இழுத்து மூடி விடுவோம் என, மிரட்டுகின்றனர்.
இதற்கு தீர்வு காணவில்லை என்றால், அனைத்து கடைகளையும் பூட்டி, சாவியை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

