ADDED : ஆக 09, 2025 12:15 AM

மாதவரம், 'ஆன்லைன்' ஷாப்பிங் தளத்தில், மின்விசிறி 'ஆர்டர்' செய்தவருக்கு செங்கல் டெலிவரி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரம், வசந்தம் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 26. இவர், நான்கு நாட்களுக்கு முன், 'ஆன்லைன்' ஷாப்பிங் தளமான அமேசானில் 'ஓரியண்ட்' பிராண்ட் மின்விசிறியை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தியுள்ளார். நேற்று மாலை ஆகாஷ் வீட்டிற்கு, பொருள் டெலிவரியானது.
அட்டை பெட்டியை திறந்து பார்த்த ஆகாஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், மின்விசிறிக்கு பதில் செங்கல் இருந்துள்ளது. இது குறித்து பொருளை டெலிவரி செய்த நபரிடம் ஆகாஷ் கேட்டபோது, அவர், 'இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது; நீங்கள் அமேசான் நிறுவனத்திற்கு ஆன்லைனில் புகார் செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.
ஆகாஷ் கூறுகையில், ''பொருளை வினியோகித்த நிறுவனத்திடம் புகார் கூறினால், அவர்கள் செங்கல் பார்சலை எடுத்துச் செல்வதில் மட்டுமே ஆர்வம் காட்டினர். ஆனால் நான் ஆர்டர் செய்த மின்விசிறியை தரவில்லை. மாறாக பணத்தை திரும்ப தருவதாக கூறுகின்றனர். அமேசான் தளத்தில் புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்,'' என்றார்.