/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜாமின் கோரிய மாணவர்கள் பெற்றோர் ஆஜராக உத்தரவு
/
ஜாமின் கோரிய மாணவர்கள் பெற்றோர் ஆஜராக உத்தரவு
ADDED : நவ 07, 2024 12:24 AM
சென்னை,
சென்னை மாநிலக் கல்லுாரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், அக்., 4ல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களால் தாக்கப்பட்டார்.
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அக்.,9ல் இறந்தார். இந்த வழக்கில், மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமின்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாணவர்களுக்கு கருணை காட்ட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கி விடும் என்ற தவறான எண்ணத்தை, மாணவர்கள் மத்தியில் உருவாக்கக் கூடாது' என்று கருத்து தெரிவித்தார்.
பின், அனைத்து ஜாமின் மனுக்களின் விசாரணையை, நவ., 14க்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.