/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரம்பூரில் செல்லும் வழியெங்கும் கழிவுநீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு, விபத்து அபாயத்தால் மக்கள் பாதிப்பு
/
பெரம்பூரில் செல்லும் வழியெங்கும் கழிவுநீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு, விபத்து அபாயத்தால் மக்கள் பாதிப்பு
பெரம்பூரில் செல்லும் வழியெங்கும் கழிவுநீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு, விபத்து அபாயத்தால் மக்கள் பாதிப்பு
பெரம்பூரில் செல்லும் வழியெங்கும் கழிவுநீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு, விபத்து அபாயத்தால் மக்கள் பாதிப்பு
ADDED : செப் 22, 2025 03:16 AM

பெரம்பூர்: மழைநீர் வடிகால்வாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு பணிகள் மந்தகதியில் நடப்பதால், பெரம்பூர் பகுதி தெருக்கள் எங்கும் கழிவு நீரும் சகதியுமாக மாறியுள்ளன. இதனால், சுகாதார சீர்கேடு மற்றும் விபத்து அபாயத்தில் பகுதிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பூர் துளசிங்கம் தெரு, சின்னையா காலனி, வடிவேலு தெரு, பாரதி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்வாய் பணிகளும், குடிநீர் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணிகளும், கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக மந்தகதியில் நடந்தது.
இதில், குடிநீர் வாரிய பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், மழைநீர் வடிகால்வாய் பணிகள் வடிவேலு தெரு உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகின்றன.
இதில், பாரதி தெரு திரு.வி.க.நகர் மண்டலம் 71வது வார்டிலும், துளசிங்கம் தெரு தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 44வது வார்டிலும் வருவதால், இருதரப்பிலும் குடிநீர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடையே போட்டா போட்டி நடக்கிறது.
இதனால், பாரதி தெரு மழைநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர், துளசிங்கம் தெருவில் ஆறாக ஓடி தேங்கியுள்ளது. மேலும், குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட மண், கழிவு சகதியாக மாறியுள்ளது. இந்த நிலையில், சமீபமாக பெய்யும் மழையால், வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, பெரம்பூர் சின்னையா காலனி 2வது குறுக்குத் தெருவில், கழிவுநீர் குழாய் பணிகள் முடிந்த நிலையில் சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் சின்னையா காலனி முழுதும் நடக்க முடியாத அளவுக்கு சகதியாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். மேலும், பகுதி முழுதும் சுகாதார சீர்கேடில் சிக்கி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பரவுது மர்ம காய்ச்சல்
இது குறித்து பெரம்பூரைச் சேர்ந்த சிவகுமார், கோமதி மற்றும் லட்சுமி ஆகியோர் கூறுகையில், 'துளசிங்கம் தெருவே சாக்கடையாகிவிட்டது. இங்குள்ள மாவு கடையை இரண்டு மாதமாக மூடியே விட்டனர். வீடுகளுக்குள்ளேயே கழிவுநீர் வருகிறது. குடிநீர் தொட்டியிலும் கழிவுநீர் கலந்து விட்டது. மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தால், அடுத்த துறையை தான் காட்டுகின்றனர். இதனால், மர்ம காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய் பாதிப்பும் அதிகரித்துள்ளது' என்றனர்.
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்பு
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், '44வது வார்டில் கழிவுநீர் கால்வாய் பணிகள் முடிந்து விட்டன. வடிவேலு தெருவில் மழைநீர் கால்வாய் பணி நடக்கிறது. இதனால், அப்பகுதியில் செல்ல வேண்டிய நீரை, 71வது வார்டில் திருப்பிவிட்டுள்ளனர். மேலும், கடந்த காலத்தில் கால்வாய் கட்டிய போது தவறுதலாக கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாயோடு இணைக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது பாரதி தெரு மழைநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இன்னும் சில நாட்களில், அனைத்தும் பிரச்னைகளும் சரிசெய்யப்படும்' என்றார்.