/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்
/
'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்
'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்
'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்
UPDATED : பிப் 06, 2026 08:53 AM
ADDED : பிப் 06, 2026 05:06 AM

பிராட்வே: அடுக்குமாடி குடியிருப்பில், 'பக்கா'வான வீடுகள் வழங்குவதாக, பிராட்வே பகுதிகளில், சாலையோரம் வசித்தவர்களின் அனைத்து குடிசைகளையும் அகற்றிய தமிழக அரசு, 55 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்காமல், 'பெப்பே' காட்டிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் நிர்க்கதியாகி நடுத்தெருவிலேயே சமைத்து சாப்பிட்டு, கொசுக்கடியில் படுத்து உறங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் என்ற சி.எம்.டி.ஏ., சார்பில், வடசென்னையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், ஏழுகிணறு, பழைய சிறைச்சாலை சாலையில், 147 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன், முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு பிளாக்குகளில், தரைத்தளம் உட்பட ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தலா 415 சதுர அடியில் மொத்தம், 776 வீடுகள், நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
சமையல் அறை, ஹால், படுக்கையறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த ஜன., 21ல் இக்குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, சில பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
கொசுக்கடி
வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், தங்கள் குடும்பத்தினருடன் குடியேறி வருகின்றனர். ஆனால், வீடு தருவதாகக்கூறி சாலையோரத்தில் அகற்றிய, 55 வீடுகளுக்கு மட்டும் இதுவரை ஒதுக்கீட்டு ஆணை வழங்காததால் அவர்கள், சாலையோரத்திலேயே வசித்து, சமைத்து சாப்பிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாலையிலும், கட்டட படிக்கட்டுகளிலும் படுத்து, கொசுக்கடியில் துாங்கும் நிலை உள்ளது.
பிராட்வே, டேவிட்சன் தெரு உட்பட 16 தெருக்களில், சாலையோரத்தில் வசித்த 65 குடும்பங்களை ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'உங்களுக்கு புதிய வீடு கிடைக்கும்' என்றார்.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், அக்குடிசை வீடுகளை மூன்று வாரத்திற்கு முன் அகற்றினர்.
இதையடுத்து, அகற்றப்பட்ட 65 வீடுகளில், 10 பயனாளிகளுக்கு மட்டும், ஏழுகிணறு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 55 பயனாளிக்கு வீடு வழங்கவில்லை.
சாலை மறியல்
இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர் கேட்டபோது, 'உங்களுக்கெல்லாம் வீடு கிடையாது' என, அதிகாரிகள் கூறி, அலட்சியமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அக்குடும்பத்தினர், தங்களுக்கு வீடு வழங்காததை கண்டித்து, பிரகாசம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பூக்கடை போலீசார், மாநகராட்சி உதவி பொறியாளர் ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர். அப்போது, 'மனுவில் அளிக்கப்படும் விபரங்களை வைத்து, வீடுகள் ஒதுக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
ஒதுக்கீட்டில் சிக்கல் இதுகுறித்து, ராயபுரம் மண்டல அதிகாரிகள் கூறியதாவது:
பிராட்வே பகுதியில், ஒரு குடிசையில், பல குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களது ரேஷன் அட்டையில் ஒரே முகவரி இருப்பதால், வீடு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் உள்ளது.
மேலும், வீடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் பலர், தற்காலிகமாக குடிசைகளை அமைத்து, அங்கு வசிப்பதாகக் காட்டுகின்றனர். இதனால் உண்மையான பயனாளிகளை, அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவுகள், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, முதற்கட்டமாக, 692 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு அடுத்த கட்டத்தில் வழங்கப்படும்.
வீடு கிடைக்கவில்லை என, மனுதாரர்கள் அளிக்கும் மனுக்களை அரசிடம் தெரிவித்து, அடுத்தக்கட்டமாக வீடு பெற்று தரப்படும். குடிசை அகற்றப்பட்ட இடங்களில் பாதசாரிகள் வசதிக்காக, நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

