/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4வது ரயில் முனையமாகிறது பெரம்பூர் ரூ.360 கோடியில் செயல்படுத்த ஒப்புதல்
/
4வது ரயில் முனையமாகிறது பெரம்பூர் ரூ.360 கோடியில் செயல்படுத்த ஒப்புதல்
4வது ரயில் முனையமாகிறது பெரம்பூர் ரூ.360 கோடியில் செயல்படுத்த ஒப்புதல்
4வது ரயில் முனையமாகிறது பெரம்பூர் ரூ.360 கோடியில் செயல்படுத்த ஒப்புதல்
ADDED : ஜூலை 19, 2025 12:19 AM
சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தை 360 கோடி ரூபாயில் நான்காவது முனையமாக மாற்ற, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் ரயில்கள் இயக்க வசதியாக, பெரம்பூர் ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றுவதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டது. இதனுடன், பெரம்பூர் - அம்பத்துார் இடையே 6.4 கி.மீ., துாரத்துக்கு 5, 6வது புதிய பாதைகள் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், பெரம்பூரை நான்காவது புதிய முனையமாக மாற்றவும், பெரம்பூர் - அம்பத்துார் தடத்தில் கூடுதலாக 5, 6வது பாதைகள் அமைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில், பெரம்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. 80க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. அதனால், பயணியருக்கான அடிப்படை வசதியுடன் கூடிய, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரம்பூரில் போதிய நிலம் இருப்பதால், இங்கு 360 கோடி ரூபாயில் நான்காவது புதிய முனையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பினோம்.
ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகளுக்கான அமைவிடங்கள், பார்சல் அலுவலகங்கள், வாகன நிறுத்தம் வசதி, வணிக வளாக பகுதிகள், சுற்றுச்சுவர்கள், மேம்படுத்தப்படும் நுழைவாயில்கள் உள்ளிட்ட விபரங்களை இணைத்து அனுப்பினோம்.
தற்போது, இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், இங்கிருந்து ரயில்கள் இயக்க வசதியாக, பெரம்பூர் - அம்பத்துார் இடையே 5, 6வது புதிய பாதைகளும் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய பாதைகள் அமையும்போது, அம்பத்துாரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரயில்களை இயக்க முடியும். பெரம்பூரில் தற்போது, நான்கு நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு விரைவில் டெண்டர் வெளியிட உள்ளோம்.
வரும் 2028ல் இந்த புதிய முனையத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.