/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5 கோடியில் பறவைகள் தீவு, படகு தளம் வளசரவாக்கம் நீர்நிலையில் அமைக்க திட்டம்
/
ரூ.5 கோடியில் பறவைகள் தீவு, படகு தளம் வளசரவாக்கம் நீர்நிலையில் அமைக்க திட்டம்
ரூ.5 கோடியில் பறவைகள் தீவு, படகு தளம் வளசரவாக்கம் நீர்நிலையில் அமைக்க திட்டம்
ரூ.5 கோடியில் பறவைகள் தீவு, படகு தளம் வளசரவாக்கம் நீர்நிலையில் அமைக்க திட்டம்
ADDED : டிச 09, 2024 04:19 AM

வளசரவாக்கம்:வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்., நகரில் 4 ஏக்கர் அளவுடைய நீர்நிலை, ஆக்கிரமிப்பில் சிக்கியது.
இதனால் 2015 கன மழை வெள்ளத்தில், எஸ்.வி.எஸ்., நகர் முதலாவது பிரதான சாலை, அம்பேத்கர் சாலை, சாய்ராம் நகர், ஜெய் நகர் உள்ளிட்ட பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய மழைநீர் வடிய பல நாட்களானது.
இதையடுத்து, ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு குறித்து, வருவாய் துறை ஆய்வு செய்து, மாநகராட்சிக்கு அறிக்கை வழங்கியது.
அதில், ஆக்கிரமிப்புகளால் ஏரியில் நீர் தேங்குவதில் சிக்கல் இருப்பதும், நீர்வழித்தடங்களில் குடியிருப்புகள் இருப்பதும் காரணம் என குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே, கடந்தாண்டு பெய்த மழையிலும், இந்த நீர்நிலை நிரம்பி உபரிநீர் வெளியேறியதில், நான்கு நாட்களுக்கு மேல் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து, தனியாரிடம் இருந்த ஏரியின் 4.05 ஏக்கர் இடத்தை, கடந்த மாதம் மாநகராட்சி மீட்டது.
மேற்கண்ட நீர்நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்கவும், நீர்நிலையை துாரிவாரி சீரமைக்கவும், மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 4.05 ஏக்கர் நிலத்தில், 2.83 ஏக்கரில் புதிதாக நீர்நிலை அமைக்கப்பட உள்ளது. இதைச் சுற்றி, பூங்கா, பறவைகள் தீவு, படகு தளம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், பூப்பந்து மையம், பைக் மற்றும் கார் நிறுத்தும் வசதி ஆகியவை, ஐந்து கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலப்பாக்கம் ஏரி
வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டு மதுரவாயல் - ஆலப்பாக்கம் சாலையில், ஆலப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால், 55 ஏக்கர் பரப்பளவில் இருந்து, 9 ஏக்கராக சுருங்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் பெய்த மழையின் போது, இந்த ஏரி நிரம்பி வழிந்து, 146, 147, 144, 148, 149 ஆகிய வார்டுகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, ஏரியை ஆழப்படுத்தி உபரிநீர் வெளியேற்ற மழைநீர் வடிகால் அமைக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன. ஏரியை ஆழப்படுத்துவதின் வாயிலாக, 1.20 லட்சம் கிலோ லிட்டர் கொள்ளளவு உடைய ஏரி, 1.54 லட்சம் கிலோ லிட்டர் கொள்ளளவாக மாற உள்ளது.
தொடர்ந்து, கரை அமைத்து, நடைபாதை, மின் விளக்குள், இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.