/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலையில் நீச்சல் குளம் பார்வைக்கு மட்டுமே அனுமதி பயன்பாட்டிற்கு வராததால் வீரர்கள் தவிப்பு
/
பல்கலையில் நீச்சல் குளம் பார்வைக்கு மட்டுமே அனுமதி பயன்பாட்டிற்கு வராததால் வீரர்கள் தவிப்பு
பல்கலையில் நீச்சல் குளம் பார்வைக்கு மட்டுமே அனுமதி பயன்பாட்டிற்கு வராததால் வீரர்கள் தவிப்பு
பல்கலையில் நீச்சல் குளம் பார்வைக்கு மட்டுமே அனுமதி பயன்பாட்டிற்கு வராததால் வீரர்கள் தவிப்பு
ADDED : பிப் 17, 2026 06:34 AM

சென்னை: மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில், மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்டு, துணை முதல்வர் உதயநிதியால் திறந்துவைக்கப்பட்ட நீச்சல் குளம், மூன்று மாதங்களாக பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
பயிற்சிக்கு இல்லாமல் பார்வைக்கு மட்டுமே இருப்பதாக, வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூரில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை இயங்கி வருகிறது. இந்த பல்கலையில், ஏராளமான மாணவ - மாணவியர் உடற்கல்வியியல் படிப்பை படித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நீச்சல் போட்டிகளில் சிறந்து விளங்கும் தமிழக வீரர் -- வீராங்கனைகளை, மேலும் மெருகேற்றும் வகையிலும், தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளை நடத்தவும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.
அதன்படி, மத்திய அரசின் 5 கோடி ரூபாய் நிதியில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில், 50 மீட்டர் நீளம்; 7 அடி ஆழம் உடைய நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.
அதை, துணை முதல்வரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி, கடந்தாண்டு நவ., 11ல் திறந்து வைத்தார். எனினும், இதுவரை இந்த நீச்சல் குளம், வீரர்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:
நீச்சல் குளம் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. நீச்சல் பயிற்சியாளர்கள், நீச்சல் குளம் பராமரிப்பாளர்கள் என, யாரும் பல்கலை நிர்வாகம் சார்பில், நியமனம் செய்யப்படவில்லை.
இதனால், தண்ணீரின் நிறம் பச்சையாக மாறி உள்ளது. இதன் காரணமாக, பல்கலையில் படித்து, நீச்சல் போட்டிக்கு தயாராகும் மாணவ - மாணவியர், கட்டணம் செலுத்தி, தனியார் நீச்சல் குளங்களில் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
போதிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளாத நிலையில், அந்த நீச்சல் குளத்தை கண்காணிக்கவே, தனி பாதுகாவலர்களை, பல்கலை பதிவாளர் நியமனம் செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

