/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளஸ் 2 மாணவர் மின்சாரம் பாய்ந்து பலி
/
பிளஸ் 2 மாணவர் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : பிப் 27, 2026 05:33 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, பகுதி நேர வேலைக்கு சென்ற பிளஸ் 2 மாணவர், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு, மலாலிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் பிரவீன்குமார், 17. இவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்; பகுதி நேரமாக வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில், தனியார் விடுதியின் பெயர் பலகை அமைக்கும் பணிக்கு சென்றுள்ளார்.
மதுரவாயலைச் சேர்ந்த அகமது என்பவரது ஏற்பாட்டில் பணி நடந்தது. பிரவீன்குமாருடன் அரசு, 22, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் பகல் 12:40 மணிக்கு, இருவரும் அலுமினிய ஏணியை பயன்படுத்தி பணி மேற்கொண்டபோது, உயரழுத்த மின் கம்பியில் ஏணி உரசி, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பிரவீன்குமார் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரியில், அரசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

