/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி : தேர்தலுக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
/
பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி : தேர்தலுக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி : தேர்தலுக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி : தேர்தலுக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 16, 2026 06:50 AM

மாடம்பாக்கம்: மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரியில் பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்தி, தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, 70வது வார்டு, மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரியில் பழமையான குளம் உள்ளது. அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய இக்குளம், 4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஆக்கிரமிப்புகளால் குளத்தின் பரப்பளவு சுருங்கிவிட்டது.
இந்நிலையில், பேரூராட்சியாக இருந்த மாடம்பாக்கத்தை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்த பின், இக்குளத்தை முழுதுமாக மீட்டு, துார் வாரி பராமரிக்கப்படும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர்.
கடந்த ஆண்டு, நகரமைப்பு அதிகாரிகள், டவுன் சர்வேயர் ஆகியோர் இணைந்து, முழுதுமாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மீட்டு, கல் பதித்தனர். தொடர்ந்து, அம்ரூத் திட்டத்தின் கீழ், 57 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் துவங்கின.
குளத்தை துார்வாரி, சுற்றி கருங்கற்கள் பதிக்கப்பட்டன. சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது. அதன்பின், மற்ற பணிகளை அப்படியே விட்டு விட்டனர். இதனால், விடுபட்ட பணிகளை துவக்கி, தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, 5வது மண்டல பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
குளத்தை துார்வாரி, கருங்கற்கள் பதித்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே, 57 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனால், மற்ற பணிகளுக்கு, தற்போது 1.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், கரையில் பூங்கா, நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு திடல் போன்ற வசதிகள் அமையவுள்ளன. விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

