ADDED : மே 22, 2025 12:38 AM
புழல், சென்னை புழல் சிறையில், 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கஞ்சா வழக்கில் கைதான ரிஷிகுமார், செபஸ்டின் டேனியல், வீரா, கரடிகரன், கவுதம் உள்ளிட்ட சிலர், விசாரணை கைதியாக நேற்று முன்தினம் இரவு, மூன்றாவது சிறை பிளாக்கில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்குள் தொழில் போட்டி காரணமாக, முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு, சென்ற ரிஷி குமார், செபஸ்டின் டேனியல் இருவரும் அறைக்கு திரும்பினர்.
அப்போது, எதிர்கோஷ்டியான வீரா, கரடிகரன், கவுதம் ஆகியோருடன், வாய் தகராறில் ஈடுபட்டனர். பின், அடிதடியாக மாறியது.
ரிஷிகுமார் தாக்கியதில், வீரா என்பவரின் முகத்தில் காயம் ஏற்பட்டு பல் உடைந்தது. சிறை நிர்வாகத்தினர் வீராவை, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
***
