ADDED : ஜன 07, 2025 12:28 AM
ஆவடி,
ஆவடி, புதிய கண்ணியம்மன் நகரைச் சேர்ந்தவர் 'ஜொள்ளு' தினேஷ், 22; ரவுடியாக வலம் வந்த இவர், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், தினேஷுக்கும், அவருடைய நண்பர்களான சாலமன், 19, சதீஷ் குமார், 20, ஆகியோருக்கும், கடந்த 2023ல் கண்ணியம்மன் நகர் மாந்தோப்பில் மது அருந்தும்போது, தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், தினேஷ் இருவரையும் வெட்டியுள்ளார். இதனால் இருதரப்பினரிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் நண்பர்கள் சந்துரு, 19, குணசேகரன், 27, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள காலி மைதானம் ஒன்றில் அமர்ந்து, தினேஷ் மது அருந்தியுள்ளார்.
அங்கு வந்த, சதீஷ் மற்றும் சாலமன், தினேஷை வெட்ட முயன்றுள்ளனர். அவர் தப்ப முயன்றபோது, அங்கிருந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்துள்ளார்.
அப்போது, நான்கு பேரும் சேர்ந்து தினேஷை சரமாரியாக வெட்டி தப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தினேஷின் ஆட்கள் எட்டு பேர், சந்தோஷ், சந்துரு, சாலமன், சதீஷ் ஆகியோரை கொலை செய்வதற்காக தேடி உள்ளனர்.
நால்வரும் மாந்தோப்பில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற தினேஷின் ஆட்கள், அவர்களை வெட்ட முயன்றபோது தப்பியுள்ளனர்.
தகவலறிந்த போலீசார், தினேஷை கொலை செய்த நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

