sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்

/

கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்

கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்

கூவத்தை நாறடிக்க ரூ.110 கோடி; அம்பத்துார் ஏரி கழிவுநீரை கலக்க வைக்க 'நவீன' திட்டம்


UPDATED : ஆக 26, 2025 10:53 AM

ADDED : ஆக 25, 2025 09:58 PM

Google News

UPDATED : ஆக 26, 2025 10:53 AM ADDED : ஆக 25, 2025 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூவம் ஆற்றை மேலும் நாறடிக்கும் வகையில், அம்பத்துார் ஏரியில் தேங்கும் கழிவுநீரை கொண்டு செல்வதற்கு, 100 கோடி ரூபாய் செலவில் மூடுகால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நீர்நிலைகள் சீரமைப்பு என்ற பெயரில் சீரழிப்பு நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் இறங்கியுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்துார் ஏரி, 40 ஆண்டுகளுக்கு முன், 650 ஏக்கராக இருந்தது. இந்த ஏரியை சுற்றி, எம்.கே.பி., நகர், சிவானந்தா நகர், சத்தியபுரம், நேரு நகர் என, பல்வேறு நகர்கள் உருவாகி உள்ளன. தற்போது, ஏரியின் பரப்பளவு, 350 ஏக்கராக சுருங்கியுள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அம்பத்துார் ஏரியை சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக, 20 கோடி ரூபாய் செலவில் துார்வாரும் பணிகள் நடந்தன. இந்த ஏரியில், 0.23 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.

வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீர் தான், இந்த ஏரியின் நீராதாரமாக இருந்தது. ஆனால், தற்போது குடியிருப்புகள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திட மற்றும் திரவ கழிவுகள், இதில் தேங்கி கிடக்கின்றன. ஏரிக்கு வரும் கழிவுநீரை தடுப்பதற்கு, நீர்வளத்துறை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

பருவமழை காலங்களில் அம்பத்துார் ஏரி நிரம்பும்போது, அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், கொரட்டூர் ஏரிக்கு சென்று, அங்கிருந்து ரெட்டேரியை அடையும். ரெட்டேரியை வைத்து, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

சில ஆண்டுகளாக, அம்பத்துார் ஏரியில் இருந்து கொரட்டூர் ஏரி வழியாக, ரெட்டேரிக்கு கழிவுநீர் அதிகம் செல்வது தெரியவந்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

அம்பத்துார் ஏரி கழிவுநீரை துார் வாரி, நீரை சுத்திகரித்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் சாத்தியமில்லை என கருதிய நீர்வளத்துறை, தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, அம்பத்துார் ஏரியில் இருந்து, 5 கி.மீ.,க்கு மூடுகால்வாய் அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல் எம்.ஜி.ஆர்., பல்கலை அருகே, இந்த கால்வாயை கூவம் ஆற்றில் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் தேர்வும் துவங்கியுள்ளது.

இதன் வாயிலாக, அம்பத்துார் ஏரியில் தேங்கும் கழிவுநீர் முழுதும், கூவம் ஆற்றிற்கு வெள்ள காலங்களில் திருப்பிவிடப்பட உள்ளது. கொரட்டூர் ஏரி வழியாக ரெட்டேரிக்கு கழிவுநீர் செல்வது தடுக்கப்பட உள்ளது என, நீர்வளத்துறையினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

தெற்கு பகிங்ஹாம் கால்வாய் இணைப்பு கால்வாயுடன், இந்த கால்வாய் பணிக்கும் சேர்த்து, உத்தண்டியில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தை கேள்விப்பட்டு, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஏரியை துார் வாரினால் மட்டுமே தீர்வு

அம்பத்துார் ஏரி முழுதும் கழிவுநீர் நிறைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து கூவத்திற்கு தண்ணீர் செல்ல, ஏற்கனவே கால்வாய் இருந்தது. ஆக்கிரமிப்புகளால் அது மாயமாகிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாததால், இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை, சாலை வழியாக மூடுகால்வாய் அமைத்து, கூவத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளனர். அம்பத்துாரில் ஏரியில் இருந்து செல்லும் கழிவுநீர், கூவத்தில் தேங்கியுள்ள கழிவுநீரோடு சேர்ந்து வெளியேறவே இந்த திட்டம் வழிவகுக்கும்; அரசு நிதி வீணாகும். இதற்கு பதிலாக, அம்பத்துார் ஏரியை முழுமையாக துார்வாரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூவம் ஆறு மாசு அடைவதை தடுக்க வேண்டும். - திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர், நீர்வளத்துறை.



ரூ.1300 கோடி என்னாச்சு?

ஒருங்கிணைந்த கூவம் ஆறு, சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ், பருத்திப்பட்டு அணைக்கட்டில் இருந்து வங்கக்கடலில் கூவம் கலக்கும் நேப்பியர் பாலம் முகத்துவாரம் வரை, 32 கி.மீ.,க்கு, 735 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கூவத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்தல், திடக்கழிவுகளை அப்புறப்படுத்துதல், ஆற்றின் வெள்ளநீர் கொள்ளளவை மேம்படுத்துதல், கரைகளில் வாழும் மக்களுக்கு மாற்று இடங்களில் வீடு வழங்குதல், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். கடந்த 2022 டிசம்பரில், இப்பணிகள் முடிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதேபோல, அடையாறு ஆறு சீரமைப்புக்கு, 555 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. நீர்நிலைகள் சீரமைப்பு என்ற பெயரில், சீரழிப்பு நடவடிக்கைகள் தொடர்வது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு

சென்னையில் உள்ள கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க, அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை துவங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, வருவாய், நீர்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து, இப்பணிகளை மேற்கொள்கின்றன. சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை இயக்குனராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு, சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று சென்றுவிட்டார். துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியாததால், அவர் விருப்ப ஓய்வில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?


கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை குடிநீர் வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கொரட்டூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் கழிவுநீரை மழைநீர் வடிகால்வாய் வாயிலாக, கொரட்டூர் ஏரியில், வெளிப்படையாகவே கலக்க விடுகின்றன. இதனால், ஏரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீரும் மோசமடைந்துள்ளது.
கழிவுநீரை கலப்பை தடுத்து, ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என, கொரட்டூர் ஏரி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தீர்ப்பாய உத்தரவுப்படி, கொரட்டூர் ஏரியில் உருவாக்கப்பட்டுள்ள பசுமை சூழல் குறித்த விவரங்களை தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக படங்களையும் தாக்கல் செய்தார்.
கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் விடப்படுவது தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள், கழிவுநீர் கலப்பை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், கழிவுநீர் விட்ட நிறுவனங்கள் மீது அபராதம் வசூல் நடவடிக்கை குறித்து, சென்னை குடிநீர் வாரியம் தவறாமல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் நவ., 4ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us