/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகத்தீஸ்வரர் கோவிலின் ரூ.5 கோடி கட்டடம் மீட்பு
/
அகத்தீஸ்வரர் கோவிலின் ரூ.5 கோடி கட்டடம் மீட்பு
ADDED : ஜன 28, 2025 12:55 AM

பிராட்வே,திருவொற்றியூர், சன்னதி தெருவில் அமைந்துள்ள  அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பிராட்வே, பிளாக் எண். 22, சர்வே எண். 2358ல், 1,130 சதுர அடி, தரைதளத்துடன், மூன்று தளம் கொண்ட கோவில் சொத்தை, ராஜ்மோகன் என்பவருக்கு வணிக பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தி கொள்ள குத்தகைக்கு விடப்பட்டது.
ராஜ்மோகன் மூலம் 'அடிக்ட் லைப் ஸ்டைல், கேலிகேட் ரோப் சப்ளையர்ஸ்' என்ற நிறுவனங்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தன.  மேலும், மேற்படி கட்டடத்தின் குத்தகை காலம் முடிவடைந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கவில்லை.
கோவில் சொத்தை தனிநபர் வசப்படுத்த முயற்சி செய்வது 2024, டிச., 26ம் தேதியன்று கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் கள ஆய்வின் போது கண்டறியப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது உடைமைகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.
கோவில் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டலம் உதவி ஆணையர் சிவகுமார், கோவில் செயல் அலுவலர் நற்சோணை, இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் முன்னிலையில் கட்டடம் பூட்டப்பட்டு, இலாகா ஆய்வர் அறிவுச்செல்வி மூலம் இலாகா முத்திரையிடப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
கோவில் சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஐந்து கோடி ரூபாய்.

