/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5,032 கோடி செலவிட்டும் விடிவில்லையா? என்ன செய்தாலும் தேங்கும்! அமைச்சர் நேருவின் கூற்றால் மக்கள் அதிர்ச்சி
/
ரூ.5,032 கோடி செலவிட்டும் விடிவில்லையா? என்ன செய்தாலும் தேங்கும்! அமைச்சர் நேருவின் கூற்றால் மக்கள் அதிர்ச்சி
ரூ.5,032 கோடி செலவிட்டும் விடிவில்லையா? என்ன செய்தாலும் தேங்கும்! அமைச்சர் நேருவின் கூற்றால் மக்கள் அதிர்ச்சி
ரூ.5,032 கோடி செலவிட்டும் விடிவில்லையா? என்ன செய்தாலும் தேங்கும்! அமைச்சர் நேருவின் கூற்றால் மக்கள் அதிர்ச்சி
ADDED : அக் 07, 2025 11:10 PM

சென்னை : ''எவ்வளவு உட்கட்டமைப்பு பணிகளை செய்தாலும், திடீரென பெய்யும் மழையால், சென்னையில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று தெரிவித்தார். வெள்ள பாதிப்பில் இருந்து சென்னையை பாதுகாக்கும் வகையில், 5,032 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்காலங்களில், சென்னை பெரும் வெள்ள பாதிப்பில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2015ல் பெய்த அதிக கன மழையால், சென்னை மாநகரம் முழுதும் வெள்ளத்தில் தத்தளித்தது.
உடைமைகளை முற்றிலும் இழந்து, மக்கள் பரிதவித்தனர். பால், தண்ணீருக்கு மக்கள் திண்டாடினர். இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப, 10 நாட்களுக்கும் மேல் ஆனது.
கடந்த 2023லும், அதுபோன்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, தி.மு.க., அரசு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து, ஆய்வு நடத்தியது.
ரூ.5,032 கோடி அக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், மாநகரம் முழுதும், 5,032 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. குறிப்பாக, கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த வடிகால்வாய் பணிகள், 763 கி.மீ., நீளத்துக்கு, 2,500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், பழைய வடிகால்வாய் இடிக்கப்பட்டு, 20 செ.மீ., மழைநீர் உள்வாங்கும் வகையிலான கட்டமைப்புகள், 1,500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.
தற்போதும், பழைய மழைநீர் வடிகால்வாய் புனரமைப்பு, மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஆகியவை, 1,032 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ள தடுப்பு பணிகளுக்காக, 5,032 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 3,040 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்புகள் உள்ளன. தொடர்ந்து, பழைய மழைநீர் வடிகால்வாய் இடிக்கப்பட்டு, புதிய வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியின் நான்காண்டுகளில், மழைநீர் வடிகால் பணிக்கு கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் அனைத்து வேலைகளையும் சரியாக செய்யும். எவ்வளவு உட்கட்டமைப்பு பணிகள் செய்தாலும், திடீரென கனமழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்.
ஒரு காலத்தில், மழை, புயல், வெள்ளம் என்றால் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து நிற்பர். இன்று, மழை என்றால் ஊரகம் மற்றும் நகராட்சி துறையினர் வேலை செய்கின்றனர்.
தற்போது கூட, மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, முதல்வர் அறிவுறுத்தினார். அனைத்து வேலைகளையும் நாங்கள் சரியாக செய்வோம்.
சென்னையில், ஏற்கனவே அறிவித்த மழைநீர் வடிகால்வாய் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. புதிய பணிகள் தான் நடந்து வருகின்றன. மேலும், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளில், புதிய பணிகள் செய்யக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை என, யார் சொன்னது. ஆதாரம் இல்லாமல் கேள்வி கேட்கக் கூடாது. சென்னை விருகம்பாக்கம், ரெட்டேரி கால்வாய் துார் வாரும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நள்ளிரவில்
ஆய்வு செய்த
உதயநிதி
துணை முதல்வர் உதயநிதி, நேற்று முன்தினம் நள்ளிரவில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட, ராயப்பேட்டை லாயிஸ் சாலைக்கு சென்றார். அங்கு, மழைநீர் வடிகால்வாய் இணைப்பு பணி மற்றும் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி துார் வாரும் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது, மழைக்காலம் துவங்கும் முன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பணிகள் முடங்க யார் காரணம்?
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் மதியழகன், கவுன்சிலர்கள், துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.
இதில், 'மூன்று ஒப்பந்த நிறுவனங்களும், மழைநீர் வடிகால்வாய் பணியை முறையாக செய்யாததால், வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றாததே இதற்கு காரணம்' என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்.
அப்போது, மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பேசுகையில், ''அதிகாரிகளுக்குள் உள்ள 'ஈகோ'வால் பணிகள் முடங்கியுள்ளது தெரிகிறது. அதிகாரிகளின் உத்தரவுகளை, ஒப்பந்ததாரர்கள் மதிக்க வேண்டும். பருவமழையின்போது அசம்பாவிதம் ஏதும் நடந்தால், அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.