/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்சென்னையில் ரூ.87 கோடி வெள்ள தடுப்பு திட்டம். கிடப்பில் போட்டாச்சு! ஒரத்துார், ஆரம்பாக்கம் புதிய நீர்த்தேக்க பணியும் இழுபறி
/
தென்சென்னையில் ரூ.87 கோடி வெள்ள தடுப்பு திட்டம். கிடப்பில் போட்டாச்சு! ஒரத்துார், ஆரம்பாக்கம் புதிய நீர்த்தேக்க பணியும் இழுபறி
தென்சென்னையில் ரூ.87 கோடி வெள்ள தடுப்பு திட்டம். கிடப்பில் போட்டாச்சு! ஒரத்துார், ஆரம்பாக்கம் புதிய நீர்த்தேக்க பணியும் இழுபறி
தென்சென்னையில் ரூ.87 கோடி வெள்ள தடுப்பு திட்டம். கிடப்பில் போட்டாச்சு! ஒரத்துார், ஆரம்பாக்கம் புதிய நீர்த்தேக்க பணியும் இழுபறி
ADDED : நவ 19, 2025 12:10 AM

குன்றத்துார்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில், குன்றத்துார் அருகே ஒரத்துார், ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம், ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தென்சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையிலான, வரதராஜபுரம் தடுப்பணை, அமரம்பேடு ஆற்றுப்படுகை பணிகள் என, 87.50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை அரசு கிடப்பில் போட்டுவிட்டதால், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் துவங்கும் அடையாற்றின் கிளையாறு, வரதராஜபுரம் பகுதியில் இணைகிறது. இங்கிருந்து, புறநகர் மற்றும் சென்னையில், 42 கி.மீ., அடையாறில் பாய்ந்தோடி, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரால், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர் வெள்ள பாதிப்பில் சிக்குவது, ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது.
இதனால், வெள்ள பாதிப்பை குறைப்பதற்கும், சென்னையின் எதிர்கால குடிநீரை தேவையை பூர்த்தி செய்யவும், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்காக, நீர்வளத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ரூ.60 கோடி ஒதுக்கீடு இதில், அடையாறு ஆற்றின் துவக்க பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க, குன்றத்துார் அருகே வரதராஜபுரம், சோமங்கலம், ஒரத்துார் ஆகிய மூன்று பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் தடுப்பணை அமைக்கும் இடங்களை கண்டறிந்தனர்.
ஒரத்துாரில் துவங்கும் அடையாறு கிளையாற்றில், இருபுறமும் உள்ள ஒரத்துார் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கமாக மாற்ற முடிவானது. இப்பணிக்காக, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்கும் வகையிலான பணி, 2019ல் துவங்கியது.
ஆற்றுப்படுகை அணை அதேபோல், வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரி, முடிச்சூர் தாங்கல் ஏரியை இணைத்து, அடையாறு கால்வாயில் தடுப்பணை கட்ட, 2020ல் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, வரதராஜபுரம் ஏரியையும், அடையாறு கால்வாயையும் இணைத்து, 11 கோடி ரூபாய் மதிப்பில் ஷட்டர்களுடன் கூடிய, 12 கண் மதகு கட்டப்பட்டது.
அதேபோல், சோமங்கலம் அருகே துவங்கும் அடையாறு கிளை ஆற்றில் நடுவீரப்பட்டு - மணிமங்கலம் சாலையில் ஆற்றின் குறுக்கே, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், பாலத்துடன் கூடிய தடுப்பணை, 2020ல் கட்டப்பட்டது.
மேலும், அதே ஆண்டு ஜூலையில், அமரம்பேடு அருகே, சோமங்கலம் கிளையாறு துவங்கும் இடத்தின் இருபுறமும் உள்ள அமரம்பேடு ஏரி, இரும்பேடு ஏரிகளை இணைத்து, 16.50 கோடி ரூபாய் மதிப்பில் ஆற்றுப்படுகை அணை அமைப்பதற்கான பணி துவங்கியது.
இதில், சோமங்கலம் அருகே 4.50 கோடி ரூபாயில் பாலத்துடன் கூடிய தடுப்பணை பணி மட்டும் முழு அளவில் முடிந்துள்ளது. இங்கு ஆண்டு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது; விவசாயிகள் பயனடைகின்றனர்.
ஆனால், ஒரத்துார் நீர்தேக்கம் பணிகள், வரதராஜபுரம் தடுப்பணை மற்றும் அமரம்பேடு ஆற்றுப்படுகை அணை என, 87.50 கோடி ரூபாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதால், வெள்ள நீரை தடுத்து நிறுத்த முடியாமல், வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

