/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரிக்கு கோவில் நிலம் குத்தகை: வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
/
கல்லுாரிக்கு கோவில் நிலம் குத்தகை: வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
கல்லுாரிக்கு கோவில் நிலம் குத்தகை: வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
கல்லுாரிக்கு கோவில் நிலம் குத்தகை: வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
UPDATED : ஜன 30, 2025 11:51 AM
ADDED : ஜன 30, 2025 12:29 AM
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில், கொளத்துாரில் கல்லுாரி அமைக்க, சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்கும் அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் இருந்து, முதல்வரின் தொகுதியான கொளத்துாரில், கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க, அங்குள்ள சோமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2.50 ஏக்கர் நிலத்தை, 25 ஆண்டு குத்தகைக்கு வழங்க, கடந்த 2024 செப்டம்பரில் அறிவிப்பாணை வெளியானது.
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, சோமநாதசுவாமி கோவில் பக்தரான, மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கியஅமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டதாவது:
அறநிலையத்துறை விதிகளை பின்பற்றாமல், கோவில் நிலம் கல்லுாரி அமைக்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டி மதிப்பின்படி, மாதம் 5.12 லட்சம் ரூபாய் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆனால், 3.19 லட்சம்ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, அந்த கோவிலுக்கு ஒரு மாதத்துக்கு, 1.93 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் சிறப்பு பிளீடர்அருண் நடராஜன் ஆஜராகினர்.
''கடந்த 2022ல், கோவில் நிலத்தை கல்லுாரி அமைக்க குத்தகைக்கு வழங்க முடிவானது. அப்போதைய வழிகாட்டி மதிப்பின்படி வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மாற்றியமைக்கப்படும். அந்த வகையில், வரும் அக்டோபரில் வாடகை மறுநிர்ணயம் செய்யப்பட்டு, குத்தகை தொடர்பான ஒப்பந்தம் முறையாக பதிவு செய்யப்படும்,'' என்றனர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

